/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விலை வழங்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடில்லை தேயிலை வினியோகத்தை நிறுத்தி உறுப்பினர்கள் போராட்டம்
/
விலை வழங்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடில்லை தேயிலை வினியோகத்தை நிறுத்தி உறுப்பினர்கள் போராட்டம்
விலை வழங்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடில்லை தேயிலை வினியோகத்தை நிறுத்தி உறுப்பினர்கள் போராட்டம்
விலை வழங்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடில்லை தேயிலை வினியோகத்தை நிறுத்தி உறுப்பினர்கள் போராட்டம்
ADDED : டிச 24, 2024 10:40 PM

ஊட்டி ;விவசாயிகளுக்கான நிலுவை தொகை வழங்காததால், பசுந்தேயிலை வினியோகத்தை நிறுத்தி இரண்டாவது நாளாக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, 30 ரூபாய் வழங்க கோரி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து மத்திய , மாநில அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகளும் பல்வேறு அமைப்பினருடன் இணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விலை நிர்ணய கமிட்டி
இதற்கிடைேய, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்ட கலெக்டர் தலைமையில் விலை நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது.
அதில், தேயிலை வாரிய செயல் இயக்குனர், விவசாய சங்க பிரதிநிதிகள் இந்த கமிட்டியில் இடம் பெற்றுள்ளனர்.
அதில், 'குன்னுார் தேயிலை வாரியம் மாதந்தோறும் அறிவிக்கும் தேயிலைக்கான விலையை சில கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் முறையாக வழங்குவதில்லை,' என, தொழிற்சாலை உறுப்பினர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த அக் ., மாதத்தில் தேயிலை கிலோவுக்கு, 24.50 பைசா அறிவிக்கப்பட்டது. அதில், கிண்ணக்கொரை, பிக்கட்டி, மஞ்சூர், எடக்காடு, இத்தலார், நஞ்சநாடு, மேற்குநாடு, மகாலிங்கம் உள்ளிட்ட, 8 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு கிலோவுக்கு, 21 ரூபாய் நிர்ணயம் செய்து தொழிற்சாலை நிர்வாகம் வழங்கியுள்ளது.
நிலுவை தொகை வேண்டும்
அந்த மாதத்திற்கான, 1.60 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க கோரி உறுப்பினர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் வழங்கப்படவில்லை. 'அந்த தொகையை அரசு வழங்க வேண்டும்; காலதாமதம் செய்யும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும்,' என, 8 கூட்டுறவு தொழிற்சாலைகளின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்தது. தமிழக அனைத்து விவசாயிகள் சங்கமும் ஆதரவு அளித்தது.
பசுந்தேயிலை வினியோகம் நிறுத்தம்
இதற்கிடையே, நிலுவை தொகை வழங்காததால் நேற்று முன்தினம் முதல் தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வினியோகம் செய்வதை உறுப்பினர்கள் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உறுப்பினர்கள் பசுந்தேயிலை வினியோகத்தை நிறுத்தியதால் தேயிலை உற்பத்தி மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டது. தொழிற்சாலைகளில் தேயிலை துாள் உற்பத்திக்கு பசுந்தேயிலை இல்லாததால் உற்பத்தி பிரிவுகள் மூடப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் செயலாளர் சுகுமாரன் கூறுகையில்,''நிலுவைத் தொகை வழங்க கோரி நேற்று முன்தினம் முதல், 8 தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வினியோகம் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மாவட்டத்தில் உள்ள பிற கூட்டுறவு தொழிற்சாலைகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்,'' என்றார்.

