/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவில் இடத்தில் 'மல்டி லெவல் பார்க்கிங்' தள திட்டம்; திருமண மண்டபம் கட்டட பக்தர்கள் கோரிக்கை
/
கோவில் இடத்தில் 'மல்டி லெவல் பார்க்கிங்' தள திட்டம்; திருமண மண்டபம் கட்டட பக்தர்கள் கோரிக்கை
கோவில் இடத்தில் 'மல்டி லெவல் பார்க்கிங்' தள திட்டம்; திருமண மண்டபம் கட்டட பக்தர்கள் கோரிக்கை
கோவில் இடத்தில் 'மல்டி லெவல் பார்க்கிங்' தள திட்டம்; திருமண மண்டபம் கட்டட பக்தர்கள் கோரிக்கை
ADDED : டிச 02, 2025 06:11 AM
குன்னுார்: 'கோவில் நிலங்களை வணிக ரீதியாக பயன்படுத்த கூடாது என, ஐகோர்ட உத்தரவிட்டுள்ள நிலையில், குன்னுார் விநாயகர் கோவில் இடத்தில் 'மல்டி லெவல் பார்க்கிங் தளம் அமைக்க கூடாது,' என, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னுார் விநாயகர் கோவில் அருகில் கடந்த, 1918ம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டடம், கடந்த பல ஆண்டுகளாக கணேஷ் தியேட்டராக செயல்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு தியேட்டர் மூடப்பட்டது.
விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இந்த இடம் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதால் கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. வணிக ரீதியாக பயன்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு, இந்த கட்டடத்தை அறநிலைய துறை இடித்து சமன்படுத்தியது. சமீபத்தில் சிவசுப்ரமணிய சுவாமி கோவில், கும்பாபிஷேக விழாவின் போது அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனால், இந்த இடம் திருவிழாவின் போது பெரும் பயனுள்ளதாக அமைந்தது.
இந்நிலையில், அந்த இடத்தில் 'மல்டி லெவல் பார்க்கிங்' தளம் கொண்டு வர முடிவு செய்து, அறநிலைய துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட இடத்தில், திருமண மண்டபம் அமைக்கவும், பக்தர்களின் தேவைக்கு பயன்படுத்தவும் குன்னுார் மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், 'மல்டி லெவல் பார்க்கிங்' தள திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறுகையில், ''கோவிலுக்கு சொந்தமான இடங்கள் பக்தர்களின் பயன்பாடு; திருவிழா பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர, வணிக ரீதியில் பயன்படுத்த கூடாது, என, ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விநாயகர் கோவில் இடத்தில் திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, இந்து அறநிலைய துறை ஆணையர், இணை ஆணையர், விநாயகர் கோவில் செயல் அலுவலருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இங்கு மல்டி லெவல் பார்க்கிங் தளம் அமைக்கும் பணி துவக்கினால், இந்து முன்னணி சார்பில் பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும்,'' என்றார்.
விநாயகர் கோவில் செயல் அலுவலர் ராஜேஷ் கூறுகையில், ''அரசு முடிவின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை செயல்படுத்துவது, நிறுத்துவது என எல்லா முடிவும் அரசின் கையில் உள்ளது. அதிகாரிகள் கையில் ஏதும் இல்லை,'' என்றார்.

