/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குண்டத்து காளியாதேவி கோவிலில் அமாவாசை பூஜை
/
குண்டத்து காளியாதேவி கோவிலில் அமாவாசை பூஜை
ADDED : மார் 10, 2024 11:03 PM

மேட்டுப்பாளையம்:குண்டத்து காளியாதேவி கோவிலில், அமாவாசை பூஜை நடந்தது. வருகிற, 27ம் தேதி குண்டம் விழா நடைபெற உள்ளது.
மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில் குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. நேற்று மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, காலை, 5:30 மணிக்கு கோவில் நடை திறந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன்பின் மதியம் உச்சி கால பூஜை நடந்தது. முன்னதாக பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ராஜகணபதி, மாதேஸ்வரர், காசி விஸ்வநாதர், ஆகிய சுவாமிகளுக்கு முதலில் பூஜைகள் செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து குண்டத்து காளியாதேவி அம்மனுக்கு பால், தயிர், நெய், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டன. தலைமை பூசாரி பழனிசாமி, அருள்வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகிய இருவரும் இணைந்து, பூஜைகள் செய்தனர்.
குண்டம் விழா
இக்கோவிலில் நாளை (12ம் தேதி) இரவு, 7:00 மணிக்கு அம்மனுக்கு பூச்சாட்டுடன், குண்டம் விழா துவங்குகிறது. 19ம் தேதி ஆடு குண்டம் திறப்பும், 25ம் தேதி அம்மன் அழைப்பு நடைபெற உள்ளது. 26ம் தேதி இரவு குண்டம் திறந்து பூ வளர்க்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, 27ம் தேதி காலை, 5:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது. 8:00 மணிக்கு அன்னதானமும், அதைத்தொடர்ந்து அம்மனுக்கும், மகா முனீஸ்வரருக்கும் அக்னி அபிஷேகம் நடைபெற உள்ளது.

