உலகில் விலை உயர்ந்த அகர் மரங்கள்: பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறை
உலகில் விலை உயர்ந்த அகர் மரங்கள்: பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறை
ADDED : பிப் 06, 2022 08:51 AM

கூடலுார்;உலகில் அழியும் நிலையில் உள்ள, விலை உயர்ந்த அகர் மரங்களை, கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில் பாதுகாக்கும் முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.உலகில் அதிக விலை உயர்ந்த அகர் (தமிழில் அகில்) மரங்கள், நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை பூர்வீகமாக கொண்டவை.இவை, ஆண்டுக்கு, 150 முதல் 750 செ.மீ., மழை அளவுள்ள பகுதியில் வளர கூடியவை. இவை விலை உயர்ந்த வாசனை திரவியம், எண்ணெய், அகர் பத்தி உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது.ஒரு கிலோ மரம், 10 ஆயிரம் ரூபாய்; இதன் எண்ணெய், 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.
குறிப்பாக, முதிர்ந்த மரத்தில், உருவாக்கும் பிசினில் வாசனை திரவியம் தயாரிப்பதால், உலக மார்க்கெட்டில் மிக அதிக விலை கிடைக்கிறது. 100 மரங்கள் இருக்கும் இடத்தில், 10 மரங்களில் மட்டும் பிசின் உற்பத்தியாகிறது.'உலகின் பல நாடுகளில், பணத்துக்காக வேகமாக அழிக்கப்பட்டுள்ள இந்த மரம், நம் நாட்டில் மழை காடுகளில் உள்ளது. அதுவும் அழியும் நிலையில் உள்ளது,' என, பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், நீலகிரி காடுகளில் இந்த மரங்கள் கண்டறியப்பட்டு, கணக்கெடுப்பு நடந்து வரும் நிலையில், தற்போது, கூடலுார் நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில் உள்ள இரண்டு மரங்களில், பூ பூத்து காய்கள் இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனை, இப்பகுதியில் அதிகளவில் உற்பத்தி செய்யும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது.
ஜீன்பூல் தாவர மைய வனச்சரகர் பிரசாத் கூறுகையில்,''முதிர்ந்த அகர் மரத்தை பூஞ்சை நோய் தாக்கும்போது, தன்னை பாதுகாத்து கொள்ள வெளியிடும் பிசின், ஒரு கிலோவுக்கு சர்வதேச சந்தையில், ஒரு கோடி ரூபாய் வரை விலை கிடைக்கிறது.இதன் மூலம் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகிறது. அதேபோல, மரத்தில் எண்ணெய் கிடைப்பதால், ஒரு கிலோவுக்கு அதிகபட்சம், 50 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்கும். அழியும் நிலையில் உள்ள இந்த மரங்களில் உள்ள காய்களின் மூலம் விதைகளை எடுத்து, அதிகளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுககப்பட்டுள்ளது,'' என்றார்.
