/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரவில் பணியாற்றும் துாய்மை தொழிலாளர்கள்
/
இரவில் பணியாற்றும் துாய்மை தொழிலாளர்கள்
ADDED : நவ 07, 2024 11:09 PM

பந்தலுார் ; நெல்லியாளம் நகராட்சி குப்பை கிடங்கில், இரவிலும் பணியாளர்கள் பணி செய்வதால் வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
நெல்லியாளம் நகராட்சியில் தனிநபர் ஒருவரின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில், துாய்மை பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
காலை, 6:00 மணிக்கு குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், மதியத்திற்கு மேல் ஏலமன்னா பகுதியில் உள்ள, குப்பை கிடங்கில் குப்பை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அங்கு பெண்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட துாய்மை பணியாளர்கள், இரவு, 8:00 மணி வரை பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த பகுதியில் யானைகள் மற்றும் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருகின்றன. இதனால், பணியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
அத்துடன் இரவில் குப்பை கிடங்கு மூடாமல் திறந்து கிடப்பதால், வளர்ப்பு எருமைகளின் கொட்டகையாக மாறி உள்ளது. உள்ளே வரும் வளர்ப்பு எருமைகள், இங்கு உள்ள குப்பை கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை உட்கொள்வதால் எருமைகளும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில்,'துாய்மை பணியாளர்கள் பணி செய்வதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். இரவு நேரங்களில் பணியாற்ற கூறுவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.