/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
"பார்க்கிங்' பிரச்னையில் சிக்கிய வி.பி., தெரு
/
"பார்க்கிங்' பிரச்னையில் சிக்கிய வி.பி., தெரு
ADDED : ஆக 07, 2011 01:53 AM
குன்னூர் : குன்னூர் வி.பி., தெருவில் 'பார்க்கிங்' பிரச்னையை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.குன்னூர் மார்க்கெட் பகுதிக்கு தினமும் ஏராளமான லாரி உட்பட சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன.
வி.பி., தெருவின் மையப்பகுதியில் லாரிகள் நின்று சரக்குகளை இறக்கி செல்வதால், அப்பகுதியில் நெரிசல் அதிகரிக்கிறது. மவுண்ட்ரோடு, டி.டி.கே., சாலையில் உள்ள கடைகளின் முன்பும் சரக்கு லாரிகள் நின்று செல்வதால், அந்த சாலைகளும் அவ்வப்போது நெரிசலில் ஸ்தம்பிக்கின்றன.சரக்கு வாகனங்களால் ஏற்படும் நெரிசலை சமாளிக்க, கடந்த 1978ம் ஆண்டு வரை லாரிகள் நிற்குமிடமாக இருந்த 'அக்கரை' பகுதியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என்ற யோசனையை நகர்நல ஆர்வலர்கள் பலர் முன்வைத்துள்ளனர். கடந்த 1978ல், புயல் மழையால் மார்க்கெட் பகுதி பெரும் சேதத்தை எதிர்கொண்ட போது.
அங்கிருந்த காய்கறி கடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன; வியாபாரிகளுக்கு, மைதானத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமாக கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டது.அப்போதைய மாநில முதல்வர் எம்.ஜி.ஆர்., வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிட்டு, நகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, புதிய வணிக வளாகம் கட்ட உத்தரவிட்டார். 'ஐ.யு.டி.பி., காம்ப்ளக்ஸ்' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அந்த கட்டடத்தில், தினசரி வாடகை அதிகம் என்ற காரணத்தை கூறி, வியாபாரிகள் கடை எடுத்து நடத்த முன்வரவில்லை. தங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக கடைகளை இதுவரை காலி செய்யவும் இல்லை. இதன் விளைவாக, மார்க்கெட்டுக்கு சரக்கேற்றி வரும் லாரி உட்பட வாகனங்கள் வி.பி., தெரு சாலையில் நின்று சரக்குகளை இறக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது; சாலையில் நெரிசலை தவிர்க்க முடியவில்லை. எனவே, குன்னூர் வி.பி., தெருவில் தொடரும் நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.