மத்திய அரசின் 'இ---நாம்' திட்டத்தில் அதிகாரிகளின்... ஒத்துழைப்பு இல்லை! ஒருங்கிணைந்த வேளாண் மையம் திறப்பது அவசியம்
மத்திய அரசின் 'இ---நாம்' திட்டத்தில் அதிகாரிகளின்... ஒத்துழைப்பு இல்லை! ஒருங்கிணைந்த வேளாண் மையம் திறப்பது அவசியம்
UPDATED : ஜூன் 17, 2026 05:02 PM
ADDED : ஜூன் 17, 2026 05:00 PM

குன்னுார்: நீலகிரியில் 'இ--நாம்' திட்டத்தில், அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் விவசாயிகள் பயன்பெற முடியாத சூழல் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், சந்தைப்படுத்துதலை நவீனப்படுத்தவும் 'இ--நாம்' (மின்னணு தேசிய வேளாண் சந்தை) திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், உருளைக்கிழங்கு, கேரட் உள்ளிட்ட தோட்ட விளை பொருட்களுக்கு அறிவியல் அடிப்படையிலான தர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, டிஜிட்டல் தர அறிக்கைகள் தயாரித்து, 'ஆன்லைன்' மூலம் ஏலம் நடத்த வழி உள்ளது. இது விவசாயிகளுக்கு சிறந்த விலையை பெற்றுத்தரும். விவசாயிகள் தங்களின் தோட்டத்தில் இருந்து மொபைல் போன் வழியாக, காய்கறி விலை விவரங்களை பதிவேற்றம் செய்து விற்பனை செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சந்தைக்கு நேரடியாக கொண்டு செல்ல வேண்டிய அவசியம் குறைந்து, நேரமும் மிச்சமாகிறது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாக, முன்கூட்டியே சந்தை மற்றும் வினியோக தகவல்கள் வழங்குதல், அறிவியல் தர மதிப்பீடு, ஆன்லைன் ஏலம், நேரடி வங்கி கணக்கு பண பரிவர்த்தனை மற்றும் வெளிப்படையான விலை நிர்ணயம், ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இந்நிலையில், நீலகிரியில் அரசு அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு இல்லாததால், மத்திய அரசின் இத்தகைய சிறந்த திட்டம், பயனில்லாமல் விசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
நீலகிரி சிறு தேயிலை விவசாயிகள் விழிப்புணர்வு மைய ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் கூறுகையில்,''விவசாயிகளுக்காக, மத்திய அரசு 'இ---நாம்' திட்டத்தை செயல் படுத்தி உள்ளது. ஊட்டி மற்றும் குன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இதனை செயல்படுத்துவதில் மெத்தனம் காட்டப்படுகிறது.
குன்னுாரில், 6.5 ஏக்கரில் ஏல மையம், சேமிப்பு கிடங்கு, பரிவர்த்தனை கூடம், இருந்தும், பணியாளர்கள் நியமித்தும் பயனில்லாமல் கிடக்கிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் இதனை அதிகாரிகள் முறையாக செயல்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த வேளாண் மையத்தை திறப்பது அவசியம்,''என்றார்.
