/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலர் கண்காட்சி நடந்த 17 நாளில் ஊட்டிக்கு வந்த... 2.41 லட்சம் பேர்! உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது அவசியம்
/
மலர் கண்காட்சி நடந்த 17 நாளில் ஊட்டிக்கு வந்த... 2.41 லட்சம் பேர்! உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது அவசியம்
மலர் கண்காட்சி நடந்த 17 நாளில் ஊட்டிக்கு வந்த... 2.41 லட்சம் பேர்! உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது அவசியம்
மலர் கண்காட்சி நடந்த 17 நாளில் ஊட்டிக்கு வந்த... 2.41 லட்சம் பேர்! உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது அவசியம்
ADDED : மே 31, 2024 12:48 AM
ஊட்டி;ஊட்டிக்கு மலர் கண்காட்சி நடந்த, 17 நாளில், 2. 41 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்., மே மாதங்களில் கோடை சீசன் நடப்பது வழக்கம். இதை காண்பதற்காக கேரளா, கர்நாடகா, தமிழகத்தின் பிற மாவட்டம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான பார்க்கிங் உட்பட போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால், வாகன நெரிசல், தங்கும் விடுதிகளில் விலை உயர்வு உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படுகின்றன.
இதனை கட்டுப்படுத்துவதற்காக, சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் இ--பாஸ் திட்டத்தை நடைமுறைபடுத்தியது.
அதன்படி, மாவட்ட நிர்வாகம் கடந்த, 7ம் தேதி முதல், ஜூன், 30ம் தேதி வரை இத்திட்டத்தை அமல்படுத்தியது.
மலர் கண்காட்சிக்கு வந்த 2.41 லட்சம் பேர்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடப்பாண்டு மலர் கண்காட்சி, கடந்த, 10ம் தேதி துவங்கி, 26ம் தேதி நிறைவடைந்தது. 17 நாட்களில் மலர் கண்காட்சியை காண, 2. 41 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தந்துள்ளனர். கடந்தாண்டு மலர் கண்காட்சி, 5 நாட்கள் நடந்தது. அதில், 1.30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த, மே, 1ம் தேதி முதல், நேற்று, 30ம் தேதி வரை, 4.20 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இ - பாஸ் நடைமுறை அமலில் இருந்தாலும், மலர் கண்காட்சியின் போது அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
40 ஆயிரம் வாகனங்கள் வருகை
கடந்த, 7ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை இ - பாஸ் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, 2.50 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். 40 ஆயிரம் வாகனங்கள் வந்து சென்றது, இ - பாஸ் பதிவு மூலம் தெரியவந்துள்ளது.
சுற்றுலா பயணிகள் கூறுகையில்,'இ - பாஸ் திட்டம் அமல்படுத்தியதை பயணிகள் என்ற முறையில் வரவேற்கிறோம். குறிப்பாக போக்குவரத்து நெரிசல் இன்றி அனைத்து சுற்றுலா தலங்களை பார்வையிட முடிந்தது,' என்றனர். அதேவேளையில், சிறு வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி சிறு வியாபாரிகள் கூறுகையில்,' கோடை சீசனை நம்பி பல இடங்களில் கடன் வாங்கி, சீசனுக்கு பல்வேறு பொருட்களை வாங்கி விற்பனைக்கு வைத்திருந்தோம்.
ஆனால், கடந்த ஆண்டுகளில் நடந்த மலர் கண்காட்சிகளின் போது நடந்த வியாபாரம், நடப்பாண்டின் மலர் கண்காட்சியின் போது இல்லை. நஷ்டம்தான் ஏற்பட்டது. எனவே, ஊட்டி சுற்றுலா பயணிகள் வருகைக்கான கட்டுப்பாடுகளை தவிர்த்து, வாகனங்களை நிறுத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகள்; பயணிகளுக்கான அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். பாரம்பரியமாக கடைபிடிக்கும், மே மாதம் மூன்றாம் வாரம் மலர் கண்காட்சியை நடத்த வேண்டும்,' என்றனர்.