ஒரு லட்சம் மக்கள் நம்பியுள்ள மருத்துவமனையில் ஒரே ஒரு டாக்டர்! நாள்தோறும், 500 புறநோயாளிகள் வருவதால் திணறல்
ஒரு லட்சம் மக்கள் நம்பியுள்ள மருத்துவமனையில் ஒரே ஒரு டாக்டர்! நாள்தோறும், 500 புறநோயாளிகள் வருவதால் திணறல்
UPDATED : ஜூலை 14, 2026 05:46 PM
ADDED : ஜூலை 14, 2026 05:22 PM

பந்தலுார்: பந்தலுார் தாலுகா அரசு மருத்துவமனையில் ஒரே ஒரு டாக்டர் மட்டும் பணியாற்றுவதால், உள்ளூர் மக்கள் சிகிச்சை பெறுவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
பந்தலுார் தாலுகாவில் நெல்லியாளம் நகராட்சி, சேரங்கோடு மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சி பகுதிகள் அமைந்து உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மருத்துவமனை சுகாதார நிலையமாக செயல்பட்ட போது, 'ஐந்து டாக்டர்கள், ஆப்ரேஷன் தியேட்டர், ஈ.சி.ஜி, உள்நோயாளிகள் பிரிவு,' என, சிறப்பாக செயல்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தாலுகா தலைமை மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்ட பின்னர், டாக்டர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு, ஆப்ரேஷன் தியேட்டர் மூடப்பட்டது. இங்கு இருந்த ஈ.சி.ஜி., வசதி வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதனால், இங்கு வரும் நோயாளிகள் அனைவரும், கூடலுார், ஊட்டி அல்லது வயநாடு தனியார் மருத்துவமனைகளுக்கு நாள்தோறும் பரிந்துரை செய்வது வழக்கமான ஒன்றாக மாறி உள்ளது.
பணியில் ஒரே ஒரு டாக்டர் இங்கு, கடந்த மாதம் வரை மூன்று டாக்டர்கள் பணியாற்றி வந்த நிலையில், தற்போது ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இவரும் பகல்; இரவு என தொடர்ச்சியாக, 48 மணி நேரம் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டிய நிலையில், மனதளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இங்கு, 6 டாக்டர்கள் பணியிடம் இருந்தும் பயனில்லை. மேலும், 3 உதவி செவிலியர்கள், மூன்று துப்புரவு பணியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள், 4- பேருக்கு பதில், இரண்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
நாள்தோறும் 500 புறநோயாளிகள் தோட்ட தொழிலாளர்கள், பழங்குடிகள் அதிகம் உள்ள இப்பகுதியில் நாள்தோறும், 500 புறநோயாளிகள் வந்து செல்லும் நிலையில், ஒரே ஒரு டாக்டரால் சீரான சிகிச்சை அளிக்கவோ, நோயாளிகளின் குறைகளை முழுமையாக கேட்க முடியாத நிலை உள்ளது. இது குறித்து உள்ளூர் மக்கள்; மக்கள் பிரநிதிகள், பல முறை மாவட்ட நிர்வாகம், சுகாதார துறை அலுவலர்களிடம் தெரிவித்தும் பயனேதும் இல்லை.
சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜசேகர் கூறுகையில்,'' பந்தலுார் மருத்துமனையில், 6 டாக்டர் பணியிடங்கள் உள்ளன. தற்போது, பணியில் ஒருவர் மட்டும் உள்ளார். மாற்று பணியில் இருவர் நியமிக்கப்பட்டு உள்ளனர். விரைவில் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
