/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திறந்த வெளியில் கழிவுநீர் கால்வாய்: நடமாட சிரமம்
/
திறந்த வெளியில் கழிவுநீர் கால்வாய்: நடமாட சிரமம்
ADDED : ஜன 23, 2025 11:04 PM

கூடலுார்;  கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் தேசிய நெடுஞ்சாலை ஓரம், திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் மீது நடைபாதை அமைக்காததால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை சேதமடைந்துள்ளது.
இதில், 450 மீட்டர் துாரம் சீரமைக்க, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தில், 95 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணி அக்., மாதம் துவங்கப்பட்டது.
இதற்காக, முதல் கட்டமாக பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், 50 அடி துாரம் நடைபாதை அகற்றப்பட்டு, புதிய நடைபாதை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டன. இப்பணிகளை, கூடுதல், கலெக்டர் கவுசிக் ஆய்வு செய்தார்.  அவர் உத்தரவுப்படி,  தற்போதுள்ள கழிவு நீர் கால்வாயை சேதப்படுத்தாமல், அதனை சற்று உயர்த்தி, அதன் மீது நடைபாதை அமைக்க, 38 லட்சம் ரூபாய்க்கு திட்ட மதிப்பீட்டில், பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே, 5 அடி அகலத்தில் இருந்து நடைபாதை, 3 அடியாக குறைந்துள்ளதால், பொதுமக்கள், வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனிடையே, 50 அடி துாரம் நடைபாதை அகற்றப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்ட கால்வாய் மீது கடந்த மூன்று மாதமாக நடைபாதை அமைக்காமல் உள்ளதால், திறந்த வெளியில் காணப்படுகிறது. இதனால், மக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.
வாடிக்கையாளர்கள் கழிவுநீர் கால்வாயை கடந்துவர முடியாததால் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கூறுகையில்,'இப்பகுதியில் திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில், மீது உடனடியாக நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

