ADDED : செப் 10, 2026 06:14 PM

கூடலுார்: கூடலுார் அருகே மரத்தில் பரண் அமைத்து தங்கி ஆட்கொல்லி புலியை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கூடலுார் லாரஸ்டன் பகுதியில், 2 பேரை தாக்கி கொன்ற புலியை பிடிக்கும் பணியில், 21ம் தேதி முதல் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 13 இடங்களில் கூண்டுகள் வைத்து, 170 தானியங்கி கேமராக்கள் பொருத்தி தேடியும் புலி கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், புலியைப் பிடிக்கும் பணியில் அடுத்த கட்டமாக, புலி நடமாட்டம் இருப்பதாக கருதப்படும் பகுதிகளில் மரங்களில் பரண் அமைத்து, அதில் வன ஊழியர்கள் கால்நடை டாக்டர் தங்கி, மயக்க ஊசி செலுத்தி புலி பிடிக்கும் முயற்சியை துவங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக, சில்வர் கிளவுட் வன சோதனை சாவடி அருகே உள்ள, தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள மரத்தில், பரண் அமைக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில், ‘இரண்டு பேரை தாக்கி கொன்ற புலியை பிடிப்பதற்காக அனைத்து விதமான தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி வருகிறோம். இதில் அடுத்த கட்டமாக, மரத்தில் பரண் அமைத்து, புலியை மயக்கி ஊசி செலுத்தி முடிவு செய்யப்பட்டுள்ளது,’ என்றனர்.
