/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை வசதிக்காக மக்கள் காத்திருப்பு போராட்டம்
/
சாலை வசதிக்காக மக்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 16, 2024 12:37 AM

குன்னுார்:கேத்தி ஆலன் நகருக்கு சாலை மற்றும் நடைபாதை வசதி ஏற்படுத்தி தராததால், 70 ஆண்டுகளாக நோயாளிகளை தொட்டில் கட்டி சுமந்து வரும் அவல நிலை தொடர்கிறது.
குன்னுார் தாலுகா, கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலன் நகரில், 70 குடும்பங்கள் உள்ளன. சாலை வசதி இல்லாததால், பள்ளி மாணவ, மாணவியர், மக்கள் சிரமப்படுகின்றனர். கடந்த, 70 ஆண்டுகளாக மக்கள் நோயாளிகளை தொட்டில் கட்டி சுமந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவலம் நீடித்து வருகிறது.
இது தொடர்பாக, மனுக்கள் அனுப்பியும், போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து, கேத்தி பேரூராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர் உட்பட பொதுமக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, குன்னுார் தாசில்தார் கனி சுந்தரம் தலைமையில் பேரூராட்சி தலைவர் ஹேமமாலினி, வி.சி.க., கிழக்கு மாவட்ட செயலாளர் சுதாகர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், 'மார்ச், 9ம் தேதி நடக்கும் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டதால், இரண்டரை மணி நேர போராட்டம் கைவிடப்பட்டது.