/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிரதமரின் 'பசல் பீமா' யோஜனா திட்டம் விவசாயிகள் பயன் பெற அழைப்பு
/
பிரதமரின் 'பசல் பீமா' யோஜனா திட்டம் விவசாயிகள் பயன் பெற அழைப்பு
பிரதமரின் 'பசல் பீமா' யோஜனா திட்டம் விவசாயிகள் பயன் பெற அழைப்பு
பிரதமரின் 'பசல் பீமா' யோஜனா திட்டம் விவசாயிகள் பயன் பெற அழைப்பு
ADDED : பிப் 06, 2024 08:59 PM
ஊட்டி;நீலகிரி விவசாயிகளின் நலன்கருதி, புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி 'பசல் பீமா' யோஜனா திட்டம், பொது காப்பீடு நிறுவனம் மூலம், நடப்பாண்டு செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் வங்கி மூலம் பயிர் கடன் பெறும் விவசாயிகள், பயிர் கடன் பெறாத விவசாயிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் என அனைவரும் பயன் பெறலாம்.
பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு, அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம், பயிர் காப்பீட்டு தொகை பிடித்தம் செய்யப்படும்.
கடன் பெறாத விவசாயிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கிலும், 'இப்கோ டோகியோ' பொது காப்பீடு நிறுவனத்திலும் பயிர் காப்பீடு தொகை செலுத்தலாம்.
காப்பீடு பெற விரும்பும் கடன் பெறாத விவசாயிகள், தேசிய பயிர் காப்பீடு வலைத்தளத்திலும் கெடு தேதிக்கு முன்பாக 'ஆன்லைன்' விண்ணப்ப படிவத்தை நிரப்பலாம். 'முன் மொழிவு படிவம், பதிவு படிவம், அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி பாஸ் புக் முதல் பக்கம்,' ஆகிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு ஏக்கர் உருளை கிழங்குக்கு, 5, 223 ரூபாய்; வாழைக்கு, 4, 623 ரூபாய்; கேரட்டுக்கு, 3,880 ரூபாய்; பூண்டுக்கு, 5, 288 ரூபாய் மற்றும் இஞ்சிக்கு, 4, 843 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்.
இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'விதைப்பு, நடவு, முளை விடும் ஆபத்துக்கள், காப்பீடு செய்யப்பட்ட பகுதியில், மழை பற்றாக்குறை, பாதகமான பருவ நிலை, வானிலை நிலவரங்கள் விளைவாக ஏற்படும் இழப்புகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.
வெள்ள பெருக்கு, பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம், நிலச்சரிவு, இயற்கை தீ, மின்னல், புயல், ஆலங்கட்டி மழை மற்றும் சூறாவளி போன்ற பேரிடர் காரணமாக, மகசூல் இழப்பிற்கு எதிராக விரிவான ஆபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.
இதற்கான விபரங்களை, மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், உதவி அலுவலரை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
உருளைக்கிழங்கு, பூண்டுக்கு பயிர் காப்பீடு செய்ய வரும், 15ம் தேதியும், வாழை, கேரட் மற்றும் இஞ்சிக்கு, 29ம் தேதியும் கடைசி நாளாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

