துார்வாராத பனஹட்டி நீரோடை தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல்
துார்வாராத பனஹட்டி நீரோடை தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல்
ADDED : மார் 30, 2026 03:30 PM
கோத்தகிரி: கோத்தகிரி பனஹட்டி நீரோடையை துார் வாராததால், வறட்சி நாட்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் அதிகரித்துள்ளது.
கோத்தகிரி பகுதியில், ஐந்துக்கும் மேற்பட்ட நீர் பிடிப்பு பகுதிகள் உள்ளன. இந்த நீர் ஆதாரத்தை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அதில், பெரும்பாலான நீர் பிடிப்பு பகுதிகள் துார்வாரப்படாமல் உள்ளன. இதனால், தண்ணீரை சேமித்து, பயிர்களுக்கு பாய்ச்சுவதில் சிக்கல் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, பனஹட்டி நீரோடை பல ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டு நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது.
இதனால், ஓடையில் காட்டுச் செடிகள் மற்றும் புற்கள் ஆக்கிரமித்து, அதன் ஆழமும் அகலமும் குறைந்துள்ளது. இப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் மலைக்காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுவதால், எதிர்வரும் வறட்சி நாட்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் வறட்சியின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பு, ஓடையை சரிவர தூர்வார நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம்.
