/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிதி உதவி கோரி பொதுமக்கள் போராட்டம்
/
நிதி உதவி கோரி பொதுமக்கள் போராட்டம்
ADDED : ஜன 02, 2025 12:51 AM

பந்தலுார்,; 'பந்தலுாரில் யானை தாக்கி காயமடைந்த நபருக்கு உரிய சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும். என,' பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலுார் அருகே, ஓர்க்கடவு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்,58. கடந்த, 30ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, வீட்டிற்கு முன்பாக சாலை ஓரத்தில் இருந்த தெரு விளக்கு கம்பத்தில் 'சுவிட்ச்' போடுவதற்காக வந்துள்ளார்.
தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த ஒற்றை யானை, பாலகிருஷ்ணனை தாக்கி துாக்கி வீசியது. அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர்.
சப்தம் எழுப்பி, யானையை அங்கிருந்து விரட்டிய பின், வனத்துறை உதவியுடன் காயமடைந்த பாலகிருஷ்ணனை, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின், மேல் சிகிச்சைக்காக வயநாடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், 'யானைகளை வனத்திற்குள் விரட்ட வேண்டும். காயமடைந்த நபருக்கு சிகிச்சைக்கு தேவையான நிதி உதவி வனத்துறை மூலம் வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தி, நேற்று முன்தினம் குந்தலாடி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.
வனச்சரகர் ரவி, டி.எஸ்.பி. சரவணன், எம்.எல். ஏ. ஜெயசீலன் ஆகியோர் சம்பவ பகுதிக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், 'மருத்துவமனைக்கு சென்று நோயாளி நிலையை கேட்டறிந்து, அதற்கு ஏற்ப மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் சிகிச்சைக்கு தேவையான நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.