/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர்
/
தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர்
ADDED : ஜூன் 29, 2025 11:03 PM

கூடலூர்; கூடலுார் அருகே மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் குளம் போல் தேங்கும் மழைநீரால், வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
கூடலுார்- ஊசிமலை -தொரப்பள்ளி இடையே,16 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் சேதமடைந்து வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இச்சாலையை சீரமைக்க, ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். சேதமடைந்த பகுதிகளில் நெடுஞ்சாலை துறையினர் அவ்வப்போது தற்காலிக சீரமைப்பு பணி மட்டும் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கேட்டபோது, 'சேதமடைந்த, இப்பகுதி சாலையை சீரமைக்க திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கிய பின் பணிகள் துவக்கப்படும்,' என, கூறுகின்றனர். இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனிடையில், தற்போது பெய்து வரும் மழையால் சாலையில் சேதமடைந்துள்ள பகுதிகளில், மழை நீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. இதனால், இப்பகுதியில் வாகனங்களை இயக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் வாகனங்கள் சேதம் அடைவதுடன் எரிபொருள் செலவும் அதிகமாகிறது. இச்சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான முயற்சியை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்,'என்றனர்.