/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.4.33 கோடி இலக்கு! 'காதி கிராப்டில்' தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்; கதர் துணிகளை மக்கள் அதிகளவில் வாங்க வேண்டுகோள்
/
ரூ.4.33 கோடி இலக்கு! 'காதி கிராப்டில்' தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்; கதர் துணிகளை மக்கள் அதிகளவில் வாங்க வேண்டுகோள்
ரூ.4.33 கோடி இலக்கு! 'காதி கிராப்டில்' தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்; கதர் துணிகளை மக்கள் அதிகளவில் வாங்க வேண்டுகோள்
ரூ.4.33 கோடி இலக்கு! 'காதி கிராப்டில்' தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்; கதர் துணிகளை மக்கள் அதிகளவில் வாங்க வேண்டுகோள்
ADDED : அக் 02, 2024 11:56 PM

ஊட்டி : 'கதர் துணிகளின் விற்பனையை ஊக்குவிக்க, நீலகிரி மக்கள் அனைவரும் இவற்றை அதிக அளவில் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி சேரிங்கிராசில் காதி கிராப்ட் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை நிலையத்தில், காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனையை நேற்று, கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார்.
அதன்படி, கோவை மற்றும் நீலகிரிக்கு, 2024 - 2025ம் ஆண்டிற்கு, 4.33 கோடி ரூபாய்க்கு கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு போலவே நடப்பு ஆண்டிற்கு மாநில அரசு மற்றும் கதர் கிராமத் தொழில்கள் ஆணை குழுவினரால் கதர் விற்பனைக்காக மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக, 'கதர், 30 சதவீதம்; பட்டு, 30 சதவீதம்; பாலியஸ்டர், 30 சதவீதம்; உல்லன், 30 சதவீதம்,' தள்ளுபடி விற்பனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், கோத்தர் பழங்குடியினருக்கு, மண்பானை தயாரிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.
ஊக்கப்படுத்தணும்
'நாம் அனைவரும் கதர் ஆடைகளை அணிய வேண்டும்,' என, காந்தியடிகள் தெரிவித்தார். அவரது வழிகாட்டுதலை பின்பற்றி, கதர் துணிகளின் விற்பனையை ஊக்குவிக்க, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலம் அனைத்து கதர் ரகங்களுக்கும் ஆண்டு முழுவதும், 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.
கிராமப்புற நெசவாளர்களால் நெசவு செய்யப்படும் கதராடைகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், கிராமப்புற கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் பலதரப்பட்ட கண்கவர் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை தமிழகத்தில் உள்ள, 90 கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்ய மாநில அரசு உதவி வருகிறது.
மேலும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் நோக்கில், நலவாரியத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளாக உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, விபத்து காப்பீடு, திருமண உதவித் தொகை, மூக்கு கண்ணாடி வாங்குவதற்கான பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''கதர் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் வாழ்வு சிறக்க, நீலகிரி மக்கள் அனைவரும் கதர் துணிகளை அதிக அளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும். இதனால், கிராம மக்களின் வாழ்வாதாரம் உயரும்,'' என்றார்.