/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொய்வு காந்தை ஆற்றுப்பாலம் கட்டுமான பணிகள் தொய்வு
/
தொய்வு காந்தை ஆற்றுப்பாலம் கட்டுமான பணிகள் தொய்வு
ADDED : பிப் 15, 2024 12:23 AM

மேட்டுப்பாளையம் : காந்தை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அடுத்த மழை காலம் துவங்கினால், பாலம் கட்டும் பணிகள் முற்றிலும் தடைபடும். அதன் பிறகு ஆற்றை கடந்து செல்ல மலைவாழ் மக்கள், மாணவ, மாணவியர், விவசாயிகள் பாதிப்பு அடைவர்.
எனவே பாலம் கட்டும் பணிகளை உடனடியாக துவக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கூறினர்.
சிறுமுகை அருகே லிங்காபுரத்திற்கும், காந்த வயலுக்கும் இடையே, காந்தை ஆற்றின் குறுக்கே, 15.40 கோடி ரூபாய் செலவில், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆற்றின் குறுக்கே, 168 மீட்டர் நீளம், 9.95 மீட்டர் அகலத்தில் பாலமும், பாலத்தின் இரண்டு புறம், 75 மீட்டர் நீளத்துக்கு நடைபாதையும், சாலையும் அமைக்கப்பட உள்ளன.
உயர் மட்ட பாலம் அமைக்க, ஆற்றின் குறுக்கே ஆறு இடங்களில் தூண்கள் கட்டப்பட உள்ளன. இதில் இரண்டு தூண்கள் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு தூண் பாதி அளவு கட்டப்பட்டுள்ளது.
மேலும், 3 தூண்கள் கட்ட அஸ்திவாரக் குழி தோண்டி வைத்த நிலையில், கோத்தகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழையால், காந்தை ஆற்றில், காட்டாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில், அஸ்திவாரக் குழிகளில் மண் மூடி, சேரும், சகதியும் நிறைந்தது. மேலும் தொடர் மழையின் காரணமாக பவானிசாகர் அணையில் நீர்மட்டம், 80 அடிக்கு மேல் உயர்ந்ததால், அணையின் தேக்கத் தண்ணீர், காந்தை ஆற்றிலும் தேங்கியது. அதனால் பாலத்தின் தூண்கள் கட்டும் பணிகள் பாதிப்படைந்தன.
இதுகுறித்து காந்தவயல் மலைவாழ் மக்கள், லிங்காபுரம் விவசாயிகள் கூறியதாவது: பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 90 அடியை எட்டும் போது, காந்தை ஆற்றில் தண்ணீர் தேங்கி நிற்கும்.
95 அடியை எட்டும் பொழுது, காந்தை ஆற்றின் குறுக்கே கட்டியுள்ள பழைய பாலம் தண்ணீரில் மூழ்கும். மேலும் புதிதாக போட்டுள்ள மண் சாலை முழுவதும், தண்ணீரில் மூழ்கிவிடும்.
அப்போது பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் ஆகியோர் ஆபத்தான நிலையில் பரிசலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
பாலம் பணிகள் நடைபெறவில்லை
தற்போது காந்தை ஆற்றில், தண்ணீர் முற்றிலும் குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதமாக பாலம் கட்டும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. ஆற்றில் தண்ணீர் தேங்கி இருந்த போது, புதிதாக தார் சாலை அமைத்து இருக்கலாம்.
ஆனால் டெண்டர் எடுத்தவர், பத்துக்கும் குறைவான ஆட்களை வைத்து, ஆமை வேகத்தில் வேலை செய்து வருகிறார்.
அதனால் தற்போது பாலம் கட்டும் பணிகள் நடைபெறாமல், தொய்வடைந்த நிலையில் உள்ளது. அடுத்த மழைக்காலம் துவங்கும் போது, காந்தை ஆற்றிலும், பவானி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதனால் மழை காலம் துவங்கும் முன், அதிக ஆட்களை வைத்து, துரிதமாக வேலை செய்ய, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

