/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் 50 சதவீதம் மதுக்கடைகள் குறைந்தும் விற்பனை அதிகரிப்பு! அரசு மறுவாழ்வு மைய வருகை 2 சதவீதமாக சரிவு
/
நீலகிரியில் 50 சதவீதம் மதுக்கடைகள் குறைந்தும் விற்பனை அதிகரிப்பு! அரசு மறுவாழ்வு மைய வருகை 2 சதவீதமாக சரிவு
நீலகிரியில் 50 சதவீதம் மதுக்கடைகள் குறைந்தும் விற்பனை அதிகரிப்பு! அரசு மறுவாழ்வு மைய வருகை 2 சதவீதமாக சரிவு
நீலகிரியில் 50 சதவீதம் மதுக்கடைகள் குறைந்தும் விற்பனை அதிகரிப்பு! அரசு மறுவாழ்வு மைய வருகை 2 சதவீதமாக சரிவு
ADDED : ஆக 29, 2025 12:31 AM

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், 50 சதவீத டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டும் மது விற்பனை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; போதையில் இருந்து விடுபட அமைக்கப்பட்ட, அரசின் மறு வாழ்வு மையத்துக்கு, 2 சதவீதம் பேர் மட்டுமே வருவது, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில், 140 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களால் கடைகள் குறைக்கப்பட்டு, தற்போது, 77 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
50 சதவீதம் டாஸ்மாக் மதுக்கடைகள் குறைக்கப்பட்டாலும், தினசரி விற்பனை, 1.40 கோடி ரூபாய், வார நாட்கள் மற்றும் சீசன் சமயங்களில், 1.50 கோடி ரூபாய் வரை விற்பனையாகி வந்தது.
விற்பனையை அதிகரிக்க உத்தரவு இந்நிலையில், 'குளிர் மாவட்டத்தில் மது விற்பனையை அதிகரிக்க வேண்டும்,' என, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதால், மதுபான கடைகளுக்கு அதிகளவு மதுபான வகைகள் விற்பனைக்கு வருகிறது.
இதனால், கடைகள் எண்ணிக்கை குறைந்தாலும், விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் பல இடங்களில், மது கடை திறப்பதற்கு முன்பாகவே, மது பிரியர்கள் கடைக்கு முன்பு கூடி நிற்பது அதிகரித்து காணப்படுகிறது. அதில், பெரும்பாலும் இளைஞர்கள் கூட்டம் உள்ளதால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது.
கிராமங்களில் அதிகாலையில் போதை ஒரு இடத்தில் டாஸ்மாக் கடை மக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டாலும், மற்றொரு இடத்தில் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது. மூடப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வேறு பகுதிக்கு சென்று மது வகைகளை வாங்கி செல்வதால் விற்பனையில் எந்த சரிவும் ஏற்படவில்லை. இதை தவிர, ஊட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 'சில்லிங்' விற்பனை நடந்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் இத்தகைய விற்பனை அதிகரித்து வருவதால், அங்குள்ள சில இளைஞர்கள், பழங்குடியின மக்கள், அதிகாலையில் போதையில் மூழ்கிவிடுகின்றனர்.
கடைகள் குறைந்தும் விற்பனை ஜோர் இத்தகைய காரணங்களாக, சமீப காலமாக டாஸ்மாக் மது விற்பனை தினசரி, 1.80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதில்,'உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள்; 25 வயது முதல் 35 வரை உள்ள இளைஞர்கள் அதிகளவில் மது வகைகளை வாங்கி வருகின்றனர்,' என்பது, சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபடும் வகையில், ஊட்டி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட மறுவாழ்வு மையத்திலும், குடிக்கு அடிமையானவர்களில், 2 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சைக்கு வந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
இதே நிலை தொடரும் பட்சத்தில், அதிகளவு மது வகைகளில் 'மூழ்கி' திளைக்கும் இளைஞர் பட்டாளம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்த சூழலை மாற்ற தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் மாவட்ட நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

