/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி மாணவன் திடீர் மரணம் மருத்துவமனை முற்றுகை
/
பள்ளி மாணவன் திடீர் மரணம் மருத்துவமனை முற்றுகை
ADDED : மார் 07, 2026 06:29 AM

குன்னுார்: 'குன்னுார் அருகே, 9-ம் வகுப்பு மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவத்தில் உண்மை நிலையை கூற வேண்டும்,' என, வலியுறுத்தி, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
குன்னுார் அருகே அருவங்காடு, சந்து காலனியை சேர்ந்த குறு தேயிலை விவசாயிகளான முருகானந்தம், அனுஷியா தம்பதியினர் மகன் புகழேஷ்,14. இவர் குன்னுாரில் உள்ள அரசு உதவிபெறும் அந்தோணியார் பள்ளியில், 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து இரு மாணவர்களுடன் திரும்பிய போது. செட்டிநாடு ஹவுஸ் பகுதியில் அவர் மயங்கி விழுந்ததாக கூறி, ஆட்டோவில் அழைத்து வந்து, குன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள் புகழேஷ் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அங்கு வந்த பெற்றோர், 'பள்ளியில் மாணவர்களுக்குள் தொடர் மோதல் ஏற்பட்டதில் அவர் இறந்தார்,' என கூறி கதறி அழுதனர்.
தொடர்ந்து, அப்பர் குன்னுார் போலீசில், பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்த வருகிறது.
இந்நிலையில், நேற்று மாணவரின் உடல் ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, திடீரென பெற்றோர் மற்றும் உறவினர்கள், 'சம்பவம் குறித்து சி.சி.டி.வி., பதிவுகள் தேவை; காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
மறியல் நடத்த முயற்சித்தனர். குன்னுார் டி.எஸ்.பி., ரவி தலைமையில் போலீசார் பேச்சு நடத்தி, 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அவர்களை சமாதானம் செய்து, மாணவரின் உடலை சொந்த ஊரான மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழு விவரம் தெரியவரும்; அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

