UPDATED : ஜூன் 28, 2026 07:25 PM
ADDED : ஜூன் 28, 2026 07:11 PM
குன்னூர்:குன்னூர் உபதலை பகுதியில் ரயில்வே சாலையிலிருந்து உபதலை கிராமத்திற்கு செல்லும் பொது படிக்கட்டுகள் கொண்ட பாதை வழியாக தினமும் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். தற்போது இப்பாதை முற்றிலும் பராமரிப்பின்றி, இருபுறமும் செடி, கொடி மற்றும் முட்புதர்கள் சூழ்ந்து பாதையை மறைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளன.
இப்பாதையின் ஓரத்தில் பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் பெருமளவில் கொட்டப்பட்டு குப்பைக்காடாக மாறியுள்ளது. இதனால், அப்பகுதியில் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது.
புதர்கள் மண்டியுள்ளதாலும், குப்பைகள் தேங்கியுள்ளதாலும் விஷ பூச்சிகள் மற்றும் பாம்புகளின் நடமாட்டமும் உள்ளது. இவ்வழியே செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இந்த பாதையில் குப்பைகளை அகற்றி, புதர்களை வெட்டி, சீரமைக்க உபதலை ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் .
