ADDED : ஏப் 27, 2025 09:16 PM

கூடலுார் : கூடலுார் புளியாம்பாறை அரசு பள்ளியில், கோடை விடுமுறையை முன்னிட்டு துவங்கிய 'ரோபோடிக்' குறித்த பயிற்சி முகாமில் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கூடலுார் புளியம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில், கோடை விடுமுறையை தொடர்ந்து கல்வித்துறை, தனியார் அறக்கட்டளைகள் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, இரண்டு வார 'ரோபோடிக்' குறித்த பயிற்சி முகாம் துவங்கியது. முகாமுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் தலைமை வகித்தார்.
ரெப்கோ வங்கி முதுநிலை மேலாளர் ரங்கராஜ் முகாமை துவங்கி வைத்து பேசுகையில், ''கோடை விடுமுறையை அரசு பள்ளி மாணவர்கள் பயனுள்ளதாக, பயன்படுத்தும் வகையில், ரோபோடிக் பயிற்சி முகாம் துவங்கப்பட்டிருப்பது வரவேற்க கூடியது. புதிய தொழில்நுட்ப உலகில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, அரசு பள்ளி மாணவர்களுக்கும் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, அறக்கட்டளை திட்ட மேலாளர் சபரிநாதன், முதன்மை அதிகாரி ஜெயஸ்ரீ, உதவி மேலாளர் ஏஞ்சல் ஆகியோர், ரோபோடிக் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாம் அடுத்த மாதம், 9ம் தேதி நிறைவு பெறுகிறது.
தலைமையாசிரியர் சங்கர் கூறுகையில், ''கோடை விடுமுறையை பள்ளி மாணவர்கள் பயனுள்ளதாக பயன்படுத்தும் வகையில், இம்முகாம் துவங்கப்பட்டுள்ளது.
அதில், 50 மாணவர்களுக்கு ரோபோடிக் குறித்து அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும்,'' என்றார்.
