/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொகுப்பு வீடுகளில் வருவாய் துறையினர் ஆய்வு
/
தொகுப்பு வீடுகளில் வருவாய் துறையினர் ஆய்வு
ADDED : ஜன 03, 2024 11:27 PM

மேட்டுப்பாளையம் : வினோபாஜி நகரில் உள்ள, வீடுகளில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லை அருகே, ஓடந்துறை ஊராட்சியில், வினோபாஜி நகர் உள்ளது. இங்கு, 137 தொகுப்பு வீடுகளும், 101 பசுமை வீடுகள் என, மொத்தம் 238 வீடுகள் உள்ளன. ஆனால் வீடுகள் கட்டி பல ஆண்டுகள் ஆகியும், இன்னும் வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இந்த ஊராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா தலைமையில், சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ., செல்வராஜ், காரமடை ஊராட்சி ஒன்றிய சேர்மன் மணிமேகலை, ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேல், ஒன்றிய கவுன்சிலர் யசோதா மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த முகாமில் வினோபாஜி நகரைச் சேர்ந்த பொதுமக்கள், தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, வினோபாஜி நகரை ஆய்வு செய்யும்படி, கூறினார். இதையடுத்து, வீடுகளில் வீட்டின் உரிமையாளர் வசிக்கின்றார்களா அல்லது வேறு யாராவது வசிக்கின்றனரா என, வருவாய் துறையினர், வீடு வீடாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஓடந்துறை ஊராட்சித் தலைவர் தங்கவேலிடம் கேட்டபோது, வினோபாஜி நகரில் உள்ள, 238 வீடுகளுக்கும், வீட்டு மனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.