ADDED : நவ 12, 2025 09:02 PM

பந்தலுார்: 'சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாணவர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது,' என, தெரிவிக்கப்பட்டது.
இந்திய தேயிலை வாரியம் சார்பில், மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழலை பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதில், பந்தலுார் அருகே குந்தலாடி அரசு உயர் நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தேயிலை வாரிய அலுவலர்கள் அஞ்சலி மற்றும் ராணி ஆகியோர் பேசுகையில், 'இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே எதிர்கால சமுதாயம், நலமுடன் வாழவும் விவசாயம் மேம்படவும் வழி கிடைக்கும். மரங்கள் வளர்த்தல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் தவிர்த்தல் போன்றவற்றால், சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட்டு, நீர் மாசுபாடு மற்றும் காற்று மாசு குறைந்து அனைத்து உயிர்களும், பாதிப்பின்றி வாழ முடியும்,' என்றனர்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து, அவற்றை பராமரிக்கும் பொறுப்பு மாணவர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவர்களுக்கு துணிப்பை, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், தேயிலை வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர்.
