/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
/
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 04, 2025 11:40 PM

ஊட்டி; நீலகிரி மாவட்டம், கோத்தகிரி 'ஹோப்பார்க்' பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் செந்தில் குமார்,50. அறிவியல் ஆசிரியரான இவர், தொடக்க கல்வித்துறையில் கோத்தகிரி கேசலாடா; ஊட்டி கிலன்மார்ன் பகுதியில் உள்ள பள்ளிகளில் பணிபுரிந்துள்ளார்.
தொடர்ந்து, துறை மாறுதல் (அலகு) பெற்று பள்ளி கல்வித்துறைக்கு மாறி, ஊட்டி அருகே கிராமத்தில் அமைந்துள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில், சில மாதங்கள் பணியாற்றி உள்ளார். பிறகு, ஆசிரியர் பயிற்றுனர் பற்றாக்குறை காரணமாக, கோத்தகிரி வட்டார வள மையத்தில், ஆசிரியர் பயிற்றுனராக பணி செய்தார்.
தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகளின் உத்தரவுப்படி, அவர் ஏற்கனவே பணிபுரிந்த ஊட்டி அருகே உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டு, கடந்த ஜூன் மாதம் முதல் பணி செய்து வந்தார்.
இந்நிலையில், ஒரு வாரத்துக்கு முன்பு அந்த பள்ளி மாணவ, மாணவியருக்கு போலீசார், பாலியல் கல்வி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த சென்றனர். அப்போது, 6ம் வகுப்பு மாணவி ஒருவர், அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்தார். அத்துடன் பள்ளியில் பயிலும், 20 மாணவிகள், செந்தில்குமார் மீது பாலியல் புகார் அளித்தனர்.
ஊட்டி ரூரல் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், நேற்று முன்தினம் நள்ளிரவு செந்தில்குமாரை கைது செய்தனர். செந்தில்குமாரை 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார் உத்தரவிட்டார்.