/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பதவி உயர்வு கிடைக்காத பல்லாயிரம்: செவிலியர்கள் அனைத்து செவிலியர்கள் சங்க மாநில தலைவர் தகவல்
/
பதவி உயர்வு கிடைக்காத பல்லாயிரம்: செவிலியர்கள் அனைத்து செவிலியர்கள் சங்க மாநில தலைவர் தகவல்
பதவி உயர்வு கிடைக்காத பல்லாயிரம்: செவிலியர்கள் அனைத்து செவிலியர்கள் சங்க மாநில தலைவர் தகவல்
பதவி உயர்வு கிடைக்காத பல்லாயிரம்: செவிலியர்கள் அனைத்து செவிலியர்கள் சங்க மாநில தலைவர் தகவல்
ADDED : ஜன 08, 2024 11:35 PM
குன்னுார்;''தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், 20 ஆயிரம் செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்,'' என, அனைத்து செவிலியர்கள் சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
குன்னுார் அரசு மருத்துவமனையில், பணிமூப்பில் உள்ள செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 5 நாட்கள் கோரிக்கை 'பேட்ஜ்' அணிந்து பணியாற்றும் போராட்டம் நேற்று துவங்கியது.
இதனை துவக்கி வைத்த, தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர் சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் கூறியதாவது:
மாநிலத்தில் சுகாதார துறையின் கீழ், அரசு மருத்துவமனைகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் சுழற்சி முறையில், 24 மணி நேரம் பணியாற்றுகின்றனர்.
மருத்துவ துறையில் மற்ற ஊழியர்களுடன் ஒப்பிடுகையில், செவிலியர்களுக்கு உரிய கால இடைவெளியில் பதவி உயர்வு வழங்குவதில்லை.
மத்திய அரசின் எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளில், 5 முதல் 10 ஆண்டு கால இடைவெளியில் இணை செவிலியர் கண்காணிப்பாளர், செவிலியர் கண்காணிப்பாளர், தலைமை செவிலியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
ஆனால், தமிழக அரசு மருத்துவமனைகளில், 25 ஆண்டுகளுக்கு பிறகே ஓய்வு பெறும் தருவாயில், செவிலியர் கண்காணிப்பாளர் நிலையில், 2 பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. செவிலியர் கண்காணிப்பாளர் என்ற குறைந்தபட்ச உயர்வு கூட இல்லாமல் ஏமாற்றமடைகின்றனர்.
மேலும், குறைந்தபட்ச ஊதியத்தில், 8 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் எம்.ஆர்.பி., ஒப்பந்த செவிலியர்கள் அதே நிலையில் பணியை நிறைவு செய்கின்றனர்.
எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அரசு அனைத்து செவிலியர் சங்கத்தின் சார்பில், பணிகளில் எந்தவித பாதிப்புமின்றி, மாநிலம் முழுவதும் துவங்கிய கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியாற்றும் கவன ஈர்ப்பு போராட்டம் வரும், 12ம் தேதி வரை நடக்கிறது. கோரிக்கைகள் எழுதிய பேட்ஜ் அணிந்து அனைத்து செவிலியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவ்வாறு பால்பாண்டியன் கூறினார்.