/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேரம்பாடி சுங்கம் அருகே நடைபாதை அவசியம்
/
சேரம்பாடி சுங்கம் அருகே நடைபாதை அவசியம்
ADDED : பிப் 16, 2025 11:12 PM

பந்தலுார்; 'பந்தலுார் சேரம்பாடி சுங்கம் அருகே, தாழ்வான பகுதியின் நடைபாதையை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
சேரம்பாடி சுங்கம் பள்ளிவாசல் பின்பகுதியில், தாழ்வான இடத்தில், 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதிக்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலையில், ஒற்றையடி நடைபாதை மற்றும், 60க்கும் மேற்பட்ட படிகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், வயோதிகர்கள் மற்றும் நோயாளிகள், 200 மீட்டர் துாரம் சாலைக்கு நடந்து வரும் நிலையே தொடர்கிறது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர், கிராமத்திற்கு செல்லும் மண்பாதையை சிமென்ட் நடைபாதையாக, மாற்றுவதற்கு நிதி ஒதுக்கி உள்ளதாக கூறி ஒப்பந்ததாரர் ஒருவர் தெரிவித்ததுடன், நடைபாதை அமைக்க தனியார் பட்டா நிலத்தில் நிலம் ஒதுக்க வலியுறுத்தியுள்ளார்.
நடைபாதை வரும் என்று ஆவலில் பட்டா நிலத்தில், இருந்த காபி செடிகளை அகற்றி, கிராம மக்கள் இணைந்து இடத்தை தயார்படுத்தி கொடுத்துள்ளனர்.
ஆனால், 'தற்போது நிதி ஒதுக்கவில்லை; நடைபாதை அமைக்க இயலாது,' என, தெரிவித்துள்ளனர்.
இதனால், இந்த வழியாக வந்து செல்லும் வயோதிகர்கள் மற்றும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பல்வேறு தேவைகளுக்கு செல்லும் குழந்தைகள், சாலை ஓரத்தில் விழுந்து பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது.
எனவே, இந்த பகுதியில் தடுப்பு சுவருடன் கூடிய நடைபாதை அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

