/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை மாவட்டத்தை மாநில அரசு புறக்கணிப்பதால் முழுமை பெறாத பயணம்! 110 வழித்தடங்களில் மின்சார பஸ் இயக்கினால் நிம்மதி
/
மலை மாவட்டத்தை மாநில அரசு புறக்கணிப்பதால் முழுமை பெறாத பயணம்! 110 வழித்தடங்களில் மின்சார பஸ் இயக்கினால் நிம்மதி
மலை மாவட்டத்தை மாநில அரசு புறக்கணிப்பதால் முழுமை பெறாத பயணம்! 110 வழித்தடங்களில் மின்சார பஸ் இயக்கினால் நிம்மதி
மலை மாவட்டத்தை மாநில அரசு புறக்கணிப்பதால் முழுமை பெறாத பயணம்! 110 வழித்தடங்களில் மின்சார பஸ் இயக்கினால் நிம்மதி
ADDED : ஜூலை 07, 2025 10:27 PM

குன்னுார்; நீலகிரியின் மக்கள் தொகைக்கு ஏற்ப, போதுமான அரசு பஸ்கள் இல்லாததால் பயணிகள் நாள்தோறும் சிரமப்படும் நிலையில், கிராம மக்கள் பயன்பெற, சென்னையை போன்று, மின்சார பஸ்கள் இயக்கியால் பல்வேறு கிராம மக்கள் பயன்பெற வாய்ப்பு ஏற்படும்.
நீலகிரி மாவட்டத்தில், 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள நிலையில், அதற்கேற்ப அரசு பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால், நாள்தோறும் மக்களின் அன்றாட பயணம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, கிராமப்புற மக்கள்; மாணவர்கள் நாள்தோறும் அவதிப்படுகின்றனர்.
110 வழித்தடம் ரத்து
மாவட்டத்தில், அரசு பஸ் இயக்கப்பட்ட, 110 வழித்தடங்கள், மினி பஸ் இயக்கத்துக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டன.
தற்போது, இயக்கப்படும் மினி பஸ்கள் பெரும்பாலும் நகரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இயக்கப்படுகிறது.
சமீபத்தில் சில வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை எடுத்த போதும், பல கிராமங்களுக்கு இன்னும் இயக்கப்படாமல் உள்ளது.
இதனால், காலை; மாலை வேளையில் கிராம மக்கள், நீண்ட துாரம் நடந்து வந்து சாலை சந்திப்புகளில், அரசு பஸ்களை நம்பி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
முழுமை பெறாத விடியல்
இதேபோல, கோவை உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் டவுன் பஸ்கள் அதிகமாக உள்ளதால், 'மகளிருக்கு விடியல் பயணம்' பெரும் பயனாக உள்ளது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் சில பகுதிகளில் மட்டும் டவுன் பஸ்கள் உள்ளதால், மகளிருக்கு பலன் கிடைப்பதில்லை.
மேலும், இங்கு 'எக்ஸ்பிரஸ்' பெயரில் இயங்கும் சாதாரண பஸ்களில் விடியல் பயணம் இல்லாததால், 35 கி.மீ., துாரத்துக்குள் இயங்கும் பஸ்கள் விடியல் பஸ்களாக மாற்றப்பட்டன. எனினும் பல இடங்களுக்கு முறையாக பஸ்கள் இயக்கம் இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
'பீக் ஹவர்சில்' நெரிசல்
குறிப்பாக, ஊட்டி- குன்னுார் இடையே அதிக உள்ளூர் பஸ்கள், பீக் ஹவர்ஸ் நேரமான, காலை மற்றும் மாலையில் போதுமான பஸ்கள் இல்லை. இதனால், 'எக்ஸ்பிரஸ்' பஸ்களில் பயணிகள் கூட்ட நெரிசலில் பயணம் செய்வது நீடிக்கிறது. இதே நிலை பெரும்பாலான கிராமங்களிலும் உள்ளது. மாவட்டத்தில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பஸ்களில் பயணம் செய்கின்றனர். எனினும் கூடுதல் அரசு பஸ்கள் இல்லாததால், பல கிராமப்புற மாணவர்கள் தனியார் வாகனங்களில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிது.
மின்சார பஸ்கள் அவசியம்
'லஞ்சமில்லா நீலகிரி' அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன் கூறுகையில், ''நீலகிரியில் போதுமான அரசு பஸ்கள் இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள பள்ளிகளுக்கு, 9:15 மணிக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் காலை உணவை கூட உட்கொள்ள முடியாமல் அதிகாலை, 7:00 மணிக்கு முன்பே புறப்பட்டு செல்கின்றனர்.
இதனால், அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது குறிப்பாக பெண் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மாலை நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, கூடுதுல் பஸ்களை காலை, மாலை நேரங்களில் இயக்க வேண்டும். சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் மின்சார பஸ்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்தை மேம்படுத்த குழு அமைத்து விரிவான ஆய்வு செய்து, அரசு பஸ் இயங்காத, 110 வழித்தடங்களில் மின்சார பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ,''என்றார்.