/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊராட்சியில் நிறைவேற்றப்படாத குடிநீர் திட்ட குழாய்களில் காத்து மட்டுமே வருது! கண்டுகொள்ளாத அதிகாரிகளால் வீணாகும் அரசு நிதி
/
ஊராட்சியில் நிறைவேற்றப்படாத குடிநீர் திட்ட குழாய்களில் காத்து மட்டுமே வருது! கண்டுகொள்ளாத அதிகாரிகளால் வீணாகும் அரசு நிதி
ஊராட்சியில் நிறைவேற்றப்படாத குடிநீர் திட்ட குழாய்களில் காத்து மட்டுமே வருது! கண்டுகொள்ளாத அதிகாரிகளால் வீணாகும் அரசு நிதி
ஊராட்சியில் நிறைவேற்றப்படாத குடிநீர் திட்ட குழாய்களில் காத்து மட்டுமே வருது! கண்டுகொள்ளாத அதிகாரிகளால் வீணாகும் அரசு நிதி
ADDED : டிச 04, 2024 09:49 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சியில் பல குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதும், முழுமை பெறாத பணிகளால் அரசு நிதி மக்களுக்கு பயன்படாமல் வீணாகி உள்ளது.
பந்தலுார் நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிதர்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அமைந்துள்ளன.
இந்த பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர், அமைக்கப்பட்ட குடிநீர் ஆதாரங்களில் இருந்து மட்டுமே, தற்போதும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மழை காலங்களில் பிரச்னை இல்லாவிட்டாலும், கோடை காலம் துவங்கினால் குடிநீருக்கு இப்பகுதி மக்கள் திண்டாடும் நிலையே தொடர்கிறது.
இதனை தவிர்க்கும் வகையில், ஊராட்சி சார்பில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதில், குறிப்பாக செயல்படுத்தப்பட்ட கூட்டு குடிநீர் திட்டம், தற்போது செயலிழந்து காணப்படுகிறது. இதனால், அரசின் நிதி மக்களுக்கு பயன்படாமல் வீணாகி உள்ளது.
முழுமை பெறாத குடிநீர் திட்டங்கள்
இதை தொடர்ந்து, செயல்படுத்தப்பட்ட, மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டமும், முழுமை படுத்தாமல் பெயரளவுக்கு செயல்படுத்தியதால், ஊராட்சிகளில் தண்ணீர் வரவேண்டிய குழாய்களில் வெறும் காற்று மட்டுமே வருகிறது.
இந்நிலையில், நெலாக்கோட்டை காமராஜ் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. தொடர்ந்து, அரசு ஆரம்பப்பள்ளி அருகே தஞ்சோரா என்ற இடத்தில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 9.60 லட்சம் ரூபாய் செலவில் கிணறு, நீர்த்தேக்க தொட்டி மற்றும் குழாய்கள் அமைக்கப்பட்டது. ஒரு ஆண்டு கடந்தும் இதுவரை, மின் இணைப்பு கிடைக்காததால், மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை தொடர்கிறது.
அதிருப்தியில் கிராம மக்கள்
இதேபோல, பதினெட்டுகுன்னு பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கோடை காலங்களில் குடிநீர் கிடைக்காத நிலையில், ஊராட்சி மூலம், 15 வது நிதி குழு திட்டத்தின் கீழ், 7 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் கிணறு மற்றும் மோட்டார் அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு ஒரு ஆண்டு கடந்து விட்டது. இந்த திட்டமும் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
மக்களுக்கு கோடை காலங்களில் பிரச்னை இல்லாமல் குடிநீர் வழங்க, அரசால் ஏற்படுத்தப்பட்ட, இத்தகைய சிறப்பு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், அரசின் நிதி மக்களுக்கு பயன்படாமல் வீணாகி வருவதுடன், வளர்ச்சி பணிகளும் தடைபடுகின்றன. இதனால், அரசு அதிகாரிகளின் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிராம மக்கள் கூறுகையில், 'தற்போது கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், நல்ல நீர் ஊற்று உள்ளதால் போதிய அளவு தண்ணீர் கிடைக்கும். அரசின் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் காட்டும் அதிகாரிகள், அதனை முழுமையாக நிறைவேற்றி, மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
எனவே, இது போன்ற முக்கிய திட்டங்களை நிறைவு செய்து, மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.