ADDED : பிப் 28, 2026 05:46 AM

பந்தலுார்: பந்தலுாரில் இருந்து, கூடலுார், ஊட்டி மற்றும் கேரளா மாநிலம் மலப் புரம், வயநாடு செல்லும் சாலையில் தேவகிரி பகுதி அமைந்துள்ளது.
பகல் நேரத்திலும் யானைகள் வந்து செல்லும் இந்த பகுதியில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. தற்போது, நிழற்குடையின் மேல் கூரை சிதிலமடைந்து, இடிந்து விழுந்து வரும் நிலையில், பயணிகள் வனவிலங்கு அச்சத்துடன் சாலையில் வாகனங்களுக்கு காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
பகல் நேரங்களில் வனவிலங்குகள் வருவதை பார்க்க முடிந்தாலும், இரவு நேரங்களில் வாகனங்களுக்கு சாலையில் காத்திருக்கும் போது ஆபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. இந்த வழியாக நகராட்சி மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் சென்று வரும் நிலையில், யாரும் இதன் பாதிப்பு குறித்து கண்டு கொள்வதாக தெரியவில்லை. எனவே, சிதிலமடைந்து காணப்படும் நிழற்குடையை அகற்றி, புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

