/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புலி உயிரிழந்த சம்பவம்: சுருக்கு வைத்த மூவர் கைது
/
புலி உயிரிழந்த சம்பவம்: சுருக்கு வைத்த மூவர் கைது
ADDED : நவ 28, 2024 11:49 PM

கூடலுார்; கூடலுார் அருகே, புலிக்கு சுருக்கு கம்பி வைத்த மூவரை வனத்துறையினர் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கூடலுார் செலுக்காடி அருகே, வனப்பகுதியில் நேற்று முன்தினம், 4 வயது ஆண் புலி, சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்தது. அதன் உடலை, முதுமலை கள இயக்குனர் கிருபாசங்கர், கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதவி வனப்பாதுகாவலர் கருப்பையா மற்றும் வன துறையினர் ஆய்வு செய்தனர்.
கால்நடை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அதில், புலி சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு, புலிக்கு சுருக்கு கம்பி வைத்தது தொடர்பாக, ஆனைசெத்த கொல்லியை சேர்ந்த மணிகண்டன்,36,மாரிமுத்து,33, தொட்ட கொல்லி பகுதியை சேர்ந்த விக்னேஷ்,32, ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கூடலுார் மாஜிஸ்திரேட் சசின்குமார் முன் ஆஜர்படுத்தினர். அவர் உத்தரவு படி, அடுத்த மாதம், 12ம் தேதி வரை கூடலுார் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, உதவி வன பாதுகாவலர் கருப்பையா தலைமையில் வன ஊழியர்கள் இரண்டு மோப்ப நாய்கள் உதவியுடன், புலி இறந்த பகுதியை சுற்றியுள்ள இடங்களிலும் ஆனை செத்தகொல்லி, வேடன்வயல், செலுக்காடி பகுதிகளில் தனியார் இடங்கள், வனப்பகுதி ஓரங்களில், சுருக்கு கம்பி வைக்கப்பட்டுள்ளதா,' என, இரண்டாவது நாளாக நேற்றும், சோதனை பணியில் ஈடுபட்டனர்.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''கைது செய்யப்பட்ட மூவரும் அப்பகுதியில் காட்டு பன்றிகளுக்காக, சுருக்கு கம்பி வைத்துள்ளனர்.
அதில், சிக்கி புலி இறந்துள்ளது. இவர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டு சுருக்கு வைக்க பயன்படும் கம்பிகளும்; மூன்று இடங்களில், வனவிலங்கு கொல்வதற்காக வைத்திருந்த சுருக்கு கம்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மீது போலீசில் பல வழக்குகள் உள்ளது. சில வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளனர்,'' என்றார்.