/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை ஏலத்தில் ரூ.22.47 கோடி மொத்த வருமானம்
/
தேயிலை ஏலத்தில் ரூ.22.47 கோடி மொத்த வருமானம்
ADDED : ஜன 31, 2025 11:17 PM
குன்னுார்,; குன்னுாரில் நடந்த தேயிலை ஏலங்களில் வரத்து விற்பனை உயர்ந்து, 22.47 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
குன்னுார் தேயிலை ஏல மையத்தில், கடந்த வாரம் நடந்த, 4வது ஏலத்தில், '13.96 லட்சம் கிலோ இலை ரகம்; 4.48 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 18.44 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. '13.38 லட்சம் கிலோ இலை ரகம்; 3.23 டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 16.61 லட்சம் கிலோ விற்பனையானது; 90 சதவீதம் விற்றது.
'சராசரி விலை கிலோவிற்கு, 124.17 ரூபாய்,' என, இருந்தது; விலையில் மாற்றம் இல்லை. மொத்த வருமானம், 20.62 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த, 3வது ஏலத்தை விட, 1.91கோடி ரூபாய் மொத்த வருமானம் அதிகரித்தது. வரத்து சற்று குறைந்த போதும், விற்பனை அதிகரித்த நிலையில், கடந்த ஏலத்தை விட, 1.62 லட்சம் கிலோ விற்பனையில் ஏற்றம் கண்டது.
மேலும், நீலகிரி, கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள், 'டீசர்வ்' ஏல மையத்தில் ஏலம் விடப்படும் நிலையில், 4வது ஏலத்திற்கு, 1.59 லட்சம் கிலோ வந்தது. 1.58 லட்சம் கிலோ விற்றது.
சராசரி விலை கிலோவிற்கு, 117 ரூபாயாக இருந்தது. கிலோவுக்கு ஒரு ரூபாய் உயர்ந்தது; 1.85 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. இரு ஏல மையங்களில் சேர்த்து, 22.47 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.