ADDED : ஜூன் 17, 2025 09:18 PM

குன்னூர்; குன்னூர் மார்க்கெட்டில், வியாபாரிகளின் வாடகை பிரச்னைகளுக்கு, தீர்வு காண்பதாக கூறி, சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது. அரசு தீர்வு காணாத நிலையில், நகராட்சி அதிகாரிகள், 'சீல் ' வைப்பதாக அறிவிப்பு கொடுத்து, பல லட்சம் நிலுவை வாடகையை வியாபாரிகளிடம் வசூலித்தனர். 41.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி கடைகளை இடித்து புதிய கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. 15 நாட்களில் காலி செய்ய வேண்டும் என, 324 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது. எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். என, வலியுறுத்தினர்.
இந்நிலையில், வியாபாரிகளுக்கு ஆதரவு அளித்து, அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி, அரசுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், மத்திய இணை அமைச்சர் முருகன், 'மக்கள் விரோத நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். என, வலியுறுத்தியுள்ளார். பிரச்னை தொடர்ந்ததால், கமிட்டி அமைத்து தீர்வு காண்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று நடந்த கூட்டத்தில் த.வெ.க., கட்சி நிர்வாகிகள், வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.
வியாபாரிகள் கூறுகையில், 'வியாபாரிகள் ஒன்றிணைந்து, அரசின் கவனத்தை ஈர்க்க பல போராட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.' என்றனர்.
