/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கட்டட விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மை அவசியம்
/
கட்டட விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மை அவசியம்
ADDED : ஜன 22, 2026 05:13 AM
குன்னுார்: 'மாவட்ட பேரிடர் பகுதிகளின் பட்டியல், 'மாஸ்டர் பிளான்' கட்டட விதிமுறைகள் குறித்து ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும், மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டள்ளது.
குன்னுார் நகராட்சியில் கமிஷனராக பதவி வகித்து, கோத்தகிரி நகராட்சி பொறுப்பு கமிஷனராகவும் பணியாற்றி வந்தவர் இளம்பரிதி.
இவரும், இளநிலை உதவியாளர் விக்னேஷ் ஆகியோர், நேற்று முன்தினம் கட்டடம் புதுபிக்கும் அனுமதிக்காக, 2 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதால், லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். போலீஸ் கூறுகையில், 'இந்த பணிக்கு அனுமதி வழங்க, 6 லட்சம் லஞ்சம் கேட்ட கமிஷனர், ஒரு லட்சம் ரூபாய் குறைத்து, 5 லட்சம் ரூபாய் நிர்ணயித்துள்ளார். அதில், 2 லட்சம் ரூபாய் முதற்கட்டமாக கொடுக்கும் போது பிடிபட்டார்.
கோத்தகிரியில் உள்ள ரமேஷ் என்பவர் தைரியமாக முன்வந்து புகார் கொடுத்ததுள்ளதால், அரசு பணிக்காக லஞ்சம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இது போன்று புகார் அளிக்க பாதிக்கப்பட்ட மக்கள் முன்வர வேண்டும்,' என்றனர்.
'குன்னுார், கோத்தகிரியில் கடந்த ஓராண்டாக அடுக்குமாடி கட்டடங்கள், விதிமீறிய கட்டடங்கள் அதிகரித்துள்ளன. அதில், சில அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்று விதிமீறலுக்கு துணை போகின்றனர்,' என, குன்னுாரில் நடந்த பல நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
சொத்து விபரம், பினாமி விசாரணை வேண்டும் லஞ்சமில்லாத நீலகிரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில், 'மாஸ்டர் பிளான்' சட்டம் வந்ததில் இருந்து, சில அரசு துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் லஞ்சம், ஊழலுக்கு அதனை சாதகமாக்கி கொண்டு வருகின்றனர். அதில், ஒரு சிலர் மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர்.
இதை தவிர, கட்டட அனுமதி பெறுவதில், உள்ளாட்சி அமைப்புகள், புவியியல், துறை, வேளான், வனத்துறை, ஹாகா கமிட்டி போன்ற துறைகளில், சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பணி நடக்கிறது.
நீலகிரி மக்கள அமைதியானவர்கள், தைரியமாக புகார் கொடுக்க மாட்டார்கள் என்பதால் ஊழல், லஞ்சம் என்பது சாதாரணமாக நடக்கிறது.
குறிப்பாக, கட்டட விதிமுறைகளில் வெளிப்படை தன்னை இல்லாததால், சமவெளி மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து வீடு கட்டுபவர்கள், உள்ளூர் மக்கள் அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
மாவட்டத்தில், நிலச்சரிவு அபாய பட்டியலில் உள்ள, 283 இடங்கள் குறித்து, அந்தந்த உள்ளாட்சிகளால் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால், பல நிலச்சரிவு அபாய பகுதிகளில் கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனை தடுக்க, மாவட்ட பேரிடர் பகுதிகளின் பட்டியல், 'மாஸ்டர் பிளான்' கட்டட விதிமுறைகள் குறித்து ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும், மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பலகையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குன்னுார் போன்று லஞ்ச வழக்குகளில் சிக்குபவர்களின் முழு சொத்து விபரங்கள், பினாமிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

