/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின்திட்ட பணிக்காக அணை நீர் வெளியேற்றப்பட்டதால் கோடையில் சிக்கல்?: பல பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
/
மின்திட்ட பணிக்காக அணை நீர் வெளியேற்றப்பட்டதால் கோடையில் சிக்கல்?: பல பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
மின்திட்ட பணிக்காக அணை நீர் வெளியேற்றப்பட்டதால் கோடையில் சிக்கல்?: பல பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
மின்திட்ட பணிக்காக அணை நீர் வெளியேற்றப்பட்டதால் கோடையில் சிக்கல்?: பல பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
UPDATED : ஜன 10, 2026 07:21 AM
ADDED : ஜன 10, 2026 06:52 AM

ஊட்டி: மஞ்சூர் குந்தா நீரேற்று மின் திட்டத்துக்காக எமரால்டு அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், நடப்பாண்டு கோடையில் பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஊட்டி அருகே காட்டுகுப்பையில், 1,850 கோடி ரூபாயில், 4 பிரிவுகளில் ஒரு பிரிவில், 500 மெகாவாட்டுக்கான குந்தா நீரேற்று மின் திட்ட பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.
2 கி.மீ., துாரம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிந்து கட்டுமான பணிகள் மற்றும் மின் சாதனங்கள் பொருத்துவது உள்ளிட்ட பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன.முதல் பிரிவுக்கான, 125 மெகாவாட் மின் உற்பத்தி பணி கடந்த, 2022 டிச., மாதம் நிறைவடைந்து உற்பத்தி துவக்கி இருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
உயரதிகாரிகள் ஆய்வு தொடர்ந்து, குந்தா நீரேற்று மின் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்ட மின் வாரிய உயர் அதிகாரிகள் பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டனர்.
அதன்படி, குந்தா நீரேற்று மின் திட்டம் பணிகள் நடக்கும் பகுதியை ஒட்டியுள்ள எமரால்டு, போர்த்தி மந்து அணைகளில் தண்ணீரை வெளியேற்றினால் தான் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன்படி, கடந்த இரண்டு மாதங்களாக எமரால்டு, போர்த்தி மந்து அணைகளிலிருந்து, 150 அடி வரை வெளியேற்றப்பட்டது. பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகிறது.
குடிநீர் வினியோகத்தில் சிக்கல்? மறுபுறம், 184 அடி கொண்ட எமரால்டு அணையின் தண்ணீர் மூன்று கிராம ஊராட்சிகள், குன்னுார் நகராட்சி, பாஸ்டியர் இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, எமரால்டு அணையில், 20 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருப்பில் உள்ளது. அணையை சுற்றியுள்ள, முக்கிய நீர் பிடிப்பு பகுதியான, போர்த்தி ஹாடா நீர்பிடிப்பு பகுதிகள் தண்ணீரின்றி மேய்ச்சல் நிலம் போல மாறியுள்ளது. அடுத்த பருவ மழைக்குள் பணிகளை முடித்தால் தான் அணை களில் தண்ணீர் சேமித்து, கூட்டு குடிநீர் திட்டம், மின் உற்பத்தி உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்த முடியும் சூழ்நிலை உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலை தொடர்ந்தால், கோடையில் பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'நடப்பாண்டில் குந்தா நீரேற்று மின் திட்ட பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அணையில் இருப்பில் உள்ள தண்ணீரை சில நாட்கள் பயன்படுத்த முடியும். அடுத்த பருவ மழைக்குள் பணிகளை முடித்து, அதன் பின் தண்ணீரை சேமித்து கூட்டு குடிநீர், மின் உற்பத்தியை சீராக்க நடவடிக்கை எடுப்படும்,' என்றனர்.

