/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பா.ஜ.,மாவட்ட தலைவர் தாக்கப்பட்ட சம்பவம்: ஊட்டியில் இருவர் கைது; போலீசார் விசாரணை
/
பா.ஜ.,மாவட்ட தலைவர் தாக்கப்பட்ட சம்பவம்: ஊட்டியில் இருவர் கைது; போலீசார் விசாரணை
பா.ஜ.,மாவட்ட தலைவர் தாக்கப்பட்ட சம்பவம்: ஊட்டியில் இருவர் கைது; போலீசார் விசாரணை
பா.ஜ.,மாவட்ட தலைவர் தாக்கப்பட்ட சம்பவம்: ஊட்டியில் இருவர் கைது; போலீசார் விசாரணை
ADDED : ஜன 01, 2024 11:42 PM

ஊட்டி;ஊட்டியில், பா.ஜ., மாவட்ட தலைவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி- கூடலுார் சாலையில் 'மான்டிரோசா' பகுதி யில் பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
இதன் அருகில், கிறிஸ்துவ சபை உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஆங்கில புத்தாண்டு பிறப்பை ஒட்டி அந்த கிறிஸ்துவ சபையில் நள்ளிரவு பிரார்த்தனை நடந்துள்ளது.
இதில், பங்கேற்க வந்தவர்கள் மோகன்ராஜ் வீட்டின் கேட் முன் வாகனங்களை நிறுத்தியுள்ளனர். அந்த வாகனங்களை எடுக்க சொல்லி மோகன்ராஜின் சகோதரர் முகேஷ் தெரிவித்துள்ளனர்.
அப்போது, ஊட்டி காந்தள் பகுதியை சேர்ந்த எபினேசர் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பு ஏற்பட்டுள்ளது.
அதில், காயமடைந்த மோகன்ராஜ், அவரது சகோதரர் முகேஷ் ஆகியோர், ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகராறில் காயமடைந்த எபினேசரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜி1 போலீசார் மருத்துவமனைக்கு சென்று இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வழக்குபதிவு செய்தனர்.
இந்நிலையில், 'பா.ஜ., மாவட்ட தலைவரை தாக்கிய நபர்களை கைது செய்ய வேண்டும்,' என கோரி, பா.ஜ., நகர செயலாளர் பரமேஸ்வரன், இளைஞர் அணி தலைவர் பிரேம் தலைமையில், ஊட்டியில் பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டம்; மறியலில் ஈடுபட்டனர்.
அதில், 54 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு வரை இருதரப்பினரிடையே போலீசார் விசாரணை நடத்தினர்.
பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் கூறுகையில், ''பா.ஜ., வளர்ச்சியை பிடிக்காத மாற்று கட்சியினர் சமீபகாலமாக மறைமுகமாக பல்வேறு பிரச்னைகளில் ஈடுபட்டு களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். என்னை தாக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
இன்ஸ்பெக்டர் மீனாபிரியா கூறுகையில், ''இந்த சம்பவத்தில் ஊட்டி காந்தள் பகுதியை சேர்ந்த ஜோயில் நித்திஷ்,23, இவரின் சகோதரர்எபினேசர்,21 ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர் விசாரணை நடந்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

