/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானைகள் தாக்கி இருவர் பரிதாப பலி
/
காட்டு யானைகள் தாக்கி இருவர் பரிதாப பலி
ADDED : மார் 09, 2024 01:02 AM

கூடலுார்,:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி மாயார் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், 52. வீட்டின் அருகே விவசாய தோட்டத்தில் நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த காட்டு யானை தாக்கி அவர் இறந்தார். மசினகுடி வனச்சரகர் பாலாஜி, வன ஊழியர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதுபோல, கூடலுார், தேவர்சோலை தனியார் எஸ்டேட் காவலராக பணியாற்றிவர் மாதேவ், 50.
இவர், நேற்று காலை, 7:30 மணிக்கு தண்ணீர் திறப்பதற்காக, தேயிலை தோட்டம் வழியாக நடந்து சென்ற போது, காட்டு யானை தாக்கி, படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வழியில் இறந்தார்.
அவரின் உறவினர்கள் மற்றும் சக தொழிலாளர்கள், 'மாதேவை கொன்ற யானையை பிடிக்க வேண்டும்; கிராமத்தை சுற்றி அகழி வெட்ட வேண்டும்' என வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்தனர். கூடலுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயசீலன் மற்றும் அதிகாரிகள், மக்களிடம் பேச்சு நடத்தினர்.
அதில், 'யானை பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவரின் உறவினர்கள் உடலை பெற்றுக் கொண்டனர்.

