அகற்றப்படாத 'பிளாஸ்டிக்' பாட்டில்கள் மாநில எல்லையில் சுற்றுச்சூழல் பாதிப்பு
அகற்றப்படாத 'பிளாஸ்டிக்' பாட்டில்கள் மாநில எல்லையில் சுற்றுச்சூழல் பாதிப்பு
ADDED : ஜூலை 24, 2026 03:34 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே தாளூர் சோதனை சாவடியில், அகற்றப்படாத பிளாஸ்டிக் பாட்டில்களால், சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
நீலகிரி மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து, தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்படுகிறது.
இவ்வாறு பறிமுதல் செய்யப்படும், பிளாஸ்டிக் பாட்டில்கள் சோதனை சாவடி அருகே உள்ள, சிறிய தொட்டிகளில் குவித்து வைக்கப்படுகிறது. அதில், மாநில எல்லையான தாளூர் சோதனை சாவடி அருகே, உள்ள தொட்டியில் கடந்த பல மாதங்களாக, பிளாஸ்டிக் பாட்டில்கள் அகற்றப்படாமல் போடப்பட்டு உள்ளது.
இதனை சுற்றிலும் புதர்கள் சூழ்ந்து வருவதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் புகலிடமாக மாறி உள்ளது. இதனால் சோதனை சாவடி பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை தடுக்க, எல்லையில் சோதனை பணிகள் நடக்கிறது. எனினும், பல இடங்களில் சுற்றுலா பயணிகள் அதனை எடுத்து வருவதும் தொடர்கிறது. மறுபுறம் பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் கவர்களை அகற்றாததால் பாதிப்பு ஏற்படுகிறது. மாதத்தில் ஒரு முறை இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் ,' என்றனர்.
