ADDED : ஜன 13, 2026 05:22 AM
பந்தலுார்: பந்தலுார் அருகே கல்லட்டி கிராமத்தில், சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 21 வார்டுகள் அமைந்துள்ளன. இந்த வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், குடிநீர் வினியோகம் முறையாக வழங்கப்படாத நிலையில், குடிநீர் கிணறுகளை துார்வாரி சுத்தப்படுத்துவது மற்றும் தரமான குடிநீர் குழாய்கள் பொருத்தி, மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வில்லை. இங்குள்ள தேவாலா கைதக்கொல்லி பகுதியில், குடிநீர் கிணறு சேரும் சகதியுமாக காணப்படும் நிலையில், ஒலிமடா பகுதியில் சிவப்பு நிறத்திற்கு குடிநீர் மாறியதால் மக்கள் அவதிப்பட்டனர்.
அசுத்தமான குடிநீர் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வராத நிலையில், தற்போதுபந்தலுார் பஜாரை ஒட்டிய கல்லட்டி, கிராமத்தில் அசுத்தமடைந்த தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு புகார் கொடுத்தும் தீர்வு இல்லை. இதனால், கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், மாசடைந்த குடிநீரை பாட்டிலில் எடுத்து வந்து, நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டார்.
ஜெயக்குமார் கூறுகையில், ''சுகாதாரமான குடிநீர்வினியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நகராட்சி அதிகாரியிடம் முறையிட்டால் அது குறித்து விசா ரிக்க கூட முன் வரவில்லை. குடிநீரால் மக்களுக்கு ஏதேனும் நோய் பாதிப்புகள் ஏற்பட்டால், அதற்கு நகராட்சி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்,'' என்றார்.
சுகாதாரமான குடிநீர்வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

