ADDED : செப் 01, 2026 06:41 PM
பந்தலுார்: பந்தலுார் அருகே தேவாலா பகுதியில், சாலை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி, மக்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
பந்தலுார் அருகே நெல்லியாளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேவாலா வாழவயல் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் குடியிருப்புக்கு செல்ல மண் சாலை அமைந்துள்ள நிலையில், அதில் பாதி அளவிற்கு நகராட்சி மூலம் சிமென்ட் சாலையாக மாற்றம் செய்யப்பட்டது. தாழ்வான பகுதிக்கு செல்லும் மண் சாலையை, சீரமைக்காத நிலையில் மக்கள் மழை காலத்தில் வழுக்கி விழுந்து சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர்.
இரவு நேரங்களில் இந்த பகுதிக்கு யானைகள் வந்து செல்லும் நிலையில், வாகனங்களும் செல்ல முடியாத சூழலில், அச்சத்துடன் தட்டு தடுமாறி நடந்து செல்கின்றனர். இது குறித்து வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு, பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மனுக்கள் கொடுத்தும், தீர்வு கிடைக்கவில்லை.
எனவே, நகராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் ஆய்வு செய்து, மக்கள் பயன்பெறும் வகையில் சிமெண்ட் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
