ADDED : செப் 15, 2026 06:53 PM
பாலக்காடு: விநாயகர் விசர்ஜன ஊர்வலம் பாலக்காட்டில் விமரிசையாக நடந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், நேற்றுமுன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. தாரைக்காடு நீராட்டு கணபதி கோவில், கல்பாத்தி மகா கணபதி கோவில், சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவில், கொடுவாயூர் ஆல் மரத்தடி கணபதி கோவில் ஆகிய முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பல்வேறு இடங்களில் ஹிந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று மதியம் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
யானைகள் அணிவகுப்புடன், மூன்று அடி முதல் 17 அடி வரையிலான 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டன.
கை அசைத்து ஆசி வழங்கும் கணபதி மாதிரியான விநாயகர் சிலை, ஊர்வலத்தின் சிறப்பம்சமாக இருந்தது.
முன்னதாக பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, விநாயகர் சிலைகள் மூத்தாந்தரை கண்ணகி அம்மன் கோவில் வளாகத்திற்கு, காலையில் எடுத்து வரப்பட்டன.
தொடர்ந்து ஊர்வலமாக, பாலக்காடு பெரிய கடை வீதி, பி.ஓ.சி., சாலை, முனிசிபல் பஸ் ஸ்டாண்ட் சென்றடைந்தது.
அங்கு மாலை, 4:00 மணிக்கு நடைபெற்ற கலாசார மாநாட்டை, ஸ்ரீ ராமதாச ஆசிரமத்தின் தலைவர் சுவாமி ஸ்ரீசக்தி சாந்தானந்தா துவக்கி வைத்தார்.
தொடர்ந்து ஜி.பி., சாலை, சுல்தான்பேட்டை சந்திப்பு, தலைமை தபால் அலுவலகம் சாலை, விக்டோரியா கல்லுாரி சாலை, சின்மயா தபோவன் சந்திப்பு, சேகரிபுரம் வழியாக கல்பாத்தி ஆற்றுக்கு வந்தடைந்தன.
தொடர்ந்து ஆற்றின் ஐந்து படித்துறைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன. விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாலக்காடு நகரில், நேற்று மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
