/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழிற் கல்வி : பழங்குடி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
தொழிற் கல்வி : பழங்குடி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
தொழிற் கல்வி : பழங்குடி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
தொழிற் கல்வி : பழங்குடி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : பிப் 03, 2025 06:46 AM

பந்தலுார் :   பழங்குடியின மாணவர்களுக்கு, தொழிற்கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கூடலுார் மற்றும் அம்பலமூலா ஆகிய இடங்களில், பள்ளி இடை நின்ற பழங்குடியின மாணவர்கள், தொடர்ந்து படிக்கும் வகையில் அரசு கல்வித்துறை மூலம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
அதில், 150க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் படித்து வரும் நிலையில், இவர்களுக்கு கல்வி மீதான நாட்டம் அதிகரிக்க களப்பயணம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
அதன்பின், பந்தலுார் அருகே உப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழிற்பயிற்சி கல்வி குறித்த நேரடி செயல் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதற்காக மாணவர்கள் பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். நிலைய முதல்வர் வெங்கடகிருஷ்ணன் தலைமை வகித்தார். தொழிற்பயிற்சி நிலைய உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார் வரவேற்று, பழங்குடியின மாணவர்கள் தொழிற்கல்வி கற்பதன் அவசியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்து பேசினார்.
உதவி பயிற்சி அலுவலர் துரைசாமி பேசுகையில், ''நாம் அன்றாட பயன்படுத்தும் மின் சாதன பொருட்கள் மற்றும் வாகனங்கள், எப்படி உருவாக்கப்படுகிறது என்பது குறித்து செயல் விளக்கம் அளிப்பது தான் இந்த நிலையத்தின் முக்கிய பணி.
இங்கு நேரடி செயல் விளக்கம் மூலம் படிப்பதால், பழங்குடியினர் மாணவர்கள் படித்து முடித்ததும், உடனடி வேலைவாய்ப்பு உள்ளது.  எனவே, பழங்குடியின மாணவர்கள், வீடுகளுக்குள் முடங்காமல் இது போன்ற தொழிற் கல்விகளை கற்றுக்கொள்ள முன் வர வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, அனைத்து வாகனங்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் பயன்பாடுகள் மற்றும் அவற்றை உருவாக்கும் விதங்கள் குறித்து நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.
பள்ளி இடை நின்ற பழங்குடியின மாணவர்கள், ஆர்வத்துடன் பங்கேற்று விளக்கங்களை கேட்டனர்.
அதன்பின், நாடுகாணி ஜீன்பூல் தாவரவியல் மையத்திற்கும் அழைத்து செல்லப்பட்டு, அதன் செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை மேற்பார்வையாளர் சண்முகம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன், தலைமை ஆசிரியர்கள் செண்பகம் மற்றும் கண்ணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

