ADDED : ஏப் 23, 2026 06:02 PM
கோத்தகிரி: நீலகிரி மாவட்டம், ஊட்டி தாலுகா, கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, அஜ்ஜூர் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பல ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். அரசு, பட்டாவுடன், மின் இணைப்பு, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
இந்நிலையில், கிராமம் அமைந்துள்ள பகுதி வனத்துறைக்கு சொந்தமானது என, பல முறை வனத்துறை சார்பில், வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி, மக்களை கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வலியுறுத்தியும், தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஓட்டுப்பதிவை புறக்கணிக்க போவதாக, ஏற்கனவே மக்கள் முடிவு எடுத்த நிலையில், நேற்று அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஓட்டுப்பதிவு நடந்தது.
இந்த ஓட்டு சாவடியில் மொத்தம், 944 ஓட்டுகளில், அஜ்ஜூர் கிராமத்தில் மட்டும் 818 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் யாரும் ஒட்டளிக்க செல்லவில்லை. தகவல் அறிந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் எஸ்.பி., நிஷா தலைமையிலான போலீசார், மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, ஆறு மணி நேரம் தாமத்திற்கு பிறகு பகல், 1:00 மணிக்கு ஒட்டு அளிக்கள் வந்தனர்.
கிராம மக்கள் கூறுகையில், 'வனத்துறையின் பிரச்னையால், கிராம மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். இதனால், ஓட்டளிக்க விரும்பவில்லை. அதிகாரிகள் அரசியல் கட்சியினர் கேட்டுகொண்டதற்கு இணங்க, நாங்கள் 'நோட்டாவுக்கு' ஓட்டு அளிக்கிறோம்' என்றனர்.
