பாலக்காட்டில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்: பாதுகாப்பு பணியில் ட்ரோன்கள் தீவிரம்!
பாலக்காட்டில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்: பாதுகாப்பு பணியில் ட்ரோன்கள் தீவிரம்!
ADDED : ஏப் 05, 2026 11:07 PM
பாலக்காடு: கேரள மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 12 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்த்து தயார் செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
கேரளாவில் சட்டசபைத் தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள, 12 தொகுதிகளுக்கு மொத்தம் உள்ள 2,536 ஓட்டுச்சாவடிகளுக்காக
3,052 பேலட் யூனிட்கள், 3,052 கட்டுப்பாட்டு கருவிகள் , 3,306 விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தொகுதிகள் வாரியாக, மூன்று முக்கிய மையங்களில் இந்தப் பணிகள் நடைபெற்றன. திருத்தாலா, பட்டாம்பி, சொரனுார், ஒற்றப்பாலம் ஆகிய தொகுதிகளுக்கான பணிகள் பத்திரிப்பாலை மவுண்ட் சீனா கல்வி நிறுவனத்தில் நடந்தது.
கோங்காடு, மண்ணார்க்காடு, மலம்புழா, பாலக்காடு தொகுதிகளின் பணிகள் அகத்தேத்தறை என்.எஸ்.எஸ் பொறியியல் கல்லுாரியிலும், தரூர், சித்தூர், நெம்மாரா மற்றும் ஆலத்துார் தொகுதிகளின் பணிகள் பாலக்காடு அரசு விக்டோரியா கல்லுாரியிலும் நடைபெற்றது.
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாவட்ட போலீசாரின் சார்பில் ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளைத் துல்லியமாக கண்காணித்தல், சமூக விரோதச்செயல்கள் மற்றும் தேர்தல் முறைகேடுகளைத் தடுத்தல்,
பிரசாரங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களைக் கண்டறிந்து சரி செய்தல்,
மோதல் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அங்கு கூடுதல் போலீஸ் படையினரை நிலைநிறுத்துதல்,
ஏதேனும் விபத்துகள் அல்லது அவசர நிலைகள் ஏற்பட்டால், மீட்புப் பணிகளை விரைவாக ஒருங்கிணைத்தல் ஆகியவைக்கு, இந்த ட்ரோன் கேமராக்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
