/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காயத்துடன் அவதிப்பட்ட புலி மரணம்; சிகிச்சை தாமதம் காரணமா?
/
காயத்துடன் அவதிப்பட்ட புலி மரணம்; சிகிச்சை தாமதம் காரணமா?
காயத்துடன் அவதிப்பட்ட புலி மரணம்; சிகிச்சை தாமதம் காரணமா?
காயத்துடன் அவதிப்பட்ட புலி மரணம்; சிகிச்சை தாமதம் காரணமா?
ADDED : ஜன 06, 2026 06:19 AM

ஊட்டி: 'ஊட்டி அருகே போர்த்தி பகுதியில் கடந்த சில நாட்களாக காலில் காயத்துடன் கிடந்த புலி, அவசர சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்தது,' என, கூறப்படுகிறது.
ஊட்டி அருகே போர்த்தி கிராமத்தை சுற்றி அடர்ந்த தேயிலை தோட்டம் உள்ளது. இங்குள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் காயத்துடன் சில நாட்களாக புலி சுற்றித்திரிவதாக, வனத்துறைக்கு தகவல் வந்தது.
தொடர்ந்து, வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் மணிமாறன் தலைமையில், ரேஞ்சர் பரணிகுமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இரவு முழுவதும் ட்ரோன் கேமரா வாயிலாக புலியை கண்காணித்து வந்தனர்.
நேற்று முன்தினம் காலை வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் நடத்திய ஆய்வில், காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், புலி தேயிலை தோட்டத்தில் உணவில்லாமல் சோர்வுடன் படுத்து கிடந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, சிசிச்சை அளிப்பது குறித்து, வனத்துறை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை புலி பரிதாபமாக உயிரிழந்தது. முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இறந்த ஆண் புலிக்கு, 7 முதல் 8 வயது வரை இருக்கும். புலிகளுக்கு இடையே நடந்த மோதலில், காயம் ஏற்பட்டு சுகவீனமாக இருந்த புலி இறந்திருக்க வாய்ப்புள்ளது. பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் கூறுகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை வந்த பின்பு, முழுமையான விபரம் தெரியவரும்,' என்றனர்.
வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில்,'புலி கடந்த ஐந்து நாட்களாக காலில் பலத்த காயத்துடன் சுற்றி வருவது வனத்துறைக்கு தெரியும். அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல், ட்ரோன் கேமராவில் கண்காணித்து வருவதால் என்ன பயன். அவசர காலத்தில் உயர் அதிகாரிகள் உடனடியாக அனுமதி அளித்து, சிகிச்சை அளித்திருந்தால் புலியை காப்பாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கும்,' என்றனர்.

