/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியின கிராமத்தில் நோய் பரப்பும் கழிவு நீர்
/
பழங்குடியின கிராமத்தில் நோய் பரப்பும் கழிவு நீர்
ADDED : நவ 03, 2024 10:23 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே போத்துக்கொல்லி பழங்குடியின கிராமத்தில், கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
கிராமப்புற குடியிருப்புகளை ஒட்டிய இடங்களில், கழிவு நீர் வழிந்தோடுவதை தடுக்கும் வகையில், அந்தந்த ஊராட்சி மூலம் நீர் உறிஞ்சும் குழிகள் அமைக்கப்பட்டது. அதில், கழிவுநீர் வழிந்தோட கால்வாய் மற்றும் தண்ணீர் குழிகளில் சுத்திகரித்து கீழ் நோக்கி செல்லும் முறையில், சிமென்ட் குழி அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஜல்லி கற்கள், செங்கல் துண்டுகள், மணல் ஆகியவை கொட்டப்பட்டு ஜல்லடை வைக்கப்படுகிறது.
ஆனால், அந்த திட்டம் பெயர் அளவிற்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் கழிவு நீர் உள்ளே செல்லாமல், வெளிப்பகுதிகளில் வழிந்தோடி வருகிறது.
இந்நிலையில், சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, போத்துக்கொல்லி பழங்குடியின கிராமத்தில், நீர் உறிஞ்சும் குழிகளில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் தேங்கி நின்று சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி பழங்குடியின மக்களுக்கு, பல்வேறு தொற்று நோய் உருவாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மேலும், இதன் அருகே குடிநீர் தேக்க தொட்டி மற்றும் கழிவு நீரில் குடிநீர் குழாய்கள் அமைந்துள்ளதால், நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
எனவே, இது போன்ற இடங்களை ஆய்வு செய்து தண்ணீர் தேங்கி நிற்காமல் பணி மேற்கொள்ள ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.