/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பைக்காரா அணையில் மூன்று மதகுகளில் தண்ணீர் திறப்பு! 'ரெட் அலர்ட்' அறிவிப்பால் திடீர் நடவடிக்கை
/
பைக்காரா அணையில் மூன்று மதகுகளில் தண்ணீர் திறப்பு! 'ரெட் அலர்ட்' அறிவிப்பால் திடீர் நடவடிக்கை
பைக்காரா அணையில் மூன்று மதகுகளில் தண்ணீர் திறப்பு! 'ரெட் அலர்ட்' அறிவிப்பால் திடீர் நடவடிக்கை
பைக்காரா அணையில் மூன்று மதகுகளில் தண்ணீர் திறப்பு! 'ரெட் அலர்ட்' அறிவிப்பால் திடீர் நடவடிக்கை
ADDED : ஆக 02, 2024 05:32 AM
ஊட்டி : நீலகிரிக்கு 'ரெட்' அலர்ட் அறிவிப்பால் பைக்காரா அணை பாதுகாப்பு கருதி மூன்று மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், குந்தா, கெத்தை, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, முக்கூர்த்தி, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயார், பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, பில்லுார் ஆகிய, 13 அணைகள், 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. 12 மின் நிலையங்களில், 32 பிரிவுகளில், தினசரி, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.
கடந்த சில நாட்களாக பெய்த தென் மேற்கு பருவ மழையால் பெரும்பாலான அணைகளுக்கு சராசரியாக, வினாடிக்கு, 400 முதல் 600 கன அடி வரை தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது.
சற்று மழை ஓய்ந்த நிலையில், வினாடிக்கு, 150 முதல், 250 கன அடி தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணைகள் அனைத்திலும் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்தது. நேற்று காலை, 9:00 மணி நிலவரப்படி, அணைகளில், 80 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.
'ரெட்' அலர்ட் நடவடிக்கை
வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோவைக்கு கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்ததை அடுத்து, நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் மின் வாரிய கட்டுப்பாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மின்வாரிய அதிகாரிகள் குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ் உள்ள அணை மற்றும் மின் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
குந்தா மேற்பார்வை செயற் பொறியாளர் பிரேம்குமார் கூறுகையில், ''பைக்காரா அணை மொத்த கொள்ளளவான 100 அடியில் 90 அடிக்கு தண்ணீர் இருப்பில் உள்ளது.
நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டதால் பைக்காரா அணையின் ஷட்டர் கீழ் நோக்கி திறக்கும் தொழில் நுட்பத்தால் திடீர் மழைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் சமயத்தில் பாதிப்பு நேரிடுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று மதகுகளில், வினாடிக்கு, 100 கன அடி வீதம், 300 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
திறக்கப்படும் தண்ணீர் வீணாகாமல் கிளன்மார்கன் அணையில் சேகரமாகிறது,'' என்றார்.