ADDED : பிப் 14, 2025 01:13 AM

பந்தலுார்:கேரள மாநிலம், வயநாடில் தொடரும் மனித - விலங்கு மோதலுக்கு தீர்வு காண வலியுறுத்தி, நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் பகுதி எல்லையில், கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் அமைந்துள்ளது. இந்த பகுதிக்குட்பட்ட மானந்தவாடி, மீனங்காடி, சுல்தான் பத்தேரி, சீரால், மேப்பாடி உள்ளிட்ட மக்கள் குடியிருப்பு பகுதியில், புலிகள் அதிகளவில் உலா வருகின்றன. சமீபத்தில், பெண் ஒருவரை புலி கொன்றது. சில நாட்களில் புலியும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. விசாரணை நடந்து வருகிறது.
மேலும், வயநாடு சுற்றுவட்டார பகுதிகளில் ஓராண்டில், 12 பேரை யானை தாக்கி கொன்றது. இந்நிலையில், 'தொடரும் மனித - விலங்கு மோதலுக்கு தீர்வு காண வேண்டும்' என, வலியுறுத்தி, காங்., சார்பில் வயநாடு மாவட்டத்தில், நேற்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
லக்கடி, வைத்திரி, கல்பெட்டா, சுல்தான் பத்தேரி பகுதிகளில் மறியலில் ஈடுபட்ட காங்., கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இதனால், தமிழகத்திலிருந்து கேரள மாநிலம், கோழிக்கோடு, கல்பெட்டா, சுல்தான் பத்தேரி பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள், கேரளாவில் இருந்து கூடலுார் மற்றும் ஊட்டி, கோவை பகுதிகளுக்கு செல்லும் கேரள மாநில அரசு பஸ்கள் இயங்கவில்லை.