கிடப்பில் போடப்பட்ட அரசின் வீடு கட்டும் பணிக்கு விடிவு எப்போது? பாதுகாப்பற்ற குடிசைகளில் அவதிப்படும் பழங்குடிகள்
கிடப்பில் போடப்பட்ட அரசின் வீடு கட்டும் பணிக்கு விடிவு எப்போது? பாதுகாப்பற்ற குடிசைகளில் அவதிப்படும் பழங்குடிகள்
UPDATED : செப் 04, 2026 05:14 PM
ADDED : செப் 04, 2026 05:14 PM
பந்தலூர்:
பந்தலூர் அருகே, சோமரா பழங்குடியின கிராமத்தில், வீடு கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் பழங்குடியின மக்கள் பாதுகாப்பற்ற குடிசைகளில் அவதிப்பட்டு வருகின்றனர்.
கூடலூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காவில் குரும்பர்,பனியர், காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், அழிவின் விளிம்பில் உள்ள, பனியர் சமுதாய பழங்குடி மக்கள் கடும் இன்னல்களுக்கு இடையே வாழ்ந்து வருகின்றனர்.
இதில், பந்தலூர் அருகே எருமாடு பஜாரை ஒட்டிய சோமரா பழங்குடியின கிராமத்தில், நிதி ஒதுக்கியும் வீடு கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், குடிசைகளில் அவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கூடலூர் ஊராட்சி ஒன்றியம் வாயிலாக ரோசம்மா, லீலா, மீனாட்சி, யசோதா ஆகியோர் குடும்பங்களுக்கு, தலா 5.75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரசு தொகுப்பு வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு பணியில் துவக்கப்பட்டது.
ஆய்வு அவசியம்
பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர், வட மாநில தொழிலாளர்களிடம் இதனை ஒப்படைத்தார். கட்டப்பட்டு வரும் வீடுகள் அனைத்தும் தரமற்ற முறையில் கட்டி வருவதுடன், பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. புதிய வீடு எதிர்பார்ப்பில் இருந்த பழங்குடியின மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
குடிசைகளில் தார்பாலின், பிளாஸ்டிக், சேலைகளால் அமைக்கப்பட்ட தற்காலிக குடிசைகளில் மழை, குளிர் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையே பாதுகாப்பற்ற நிலையில் அவல நிலையில் வசித்து வருகின்றனர்.
தரமற்ற முறையில் கட்டியதுடன், கிடப்பில் போட்ட பணியை ஒப்பந்ததாரர் வேலை செய்வதற்கு முன்பாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தரமற்ற முறையில் கட்டி வீடுகளில் மேற்கூரை, சுவர்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்ய வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்படுவதால் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.என, பழங்குடியின மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து, தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
