/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உண்ணி செடிகள் அகற்றும் பணி கூடலுார் வனப்பகுதியில் துவக்கம்
/
உண்ணி செடிகள் அகற்றும் பணி கூடலுார் வனப்பகுதியில் துவக்கம்
உண்ணி செடிகள் அகற்றும் பணி கூடலுார் வனப்பகுதியில் துவக்கம்
உண்ணி செடிகள் அகற்றும் பணி கூடலுார் வனப்பகுதியில் துவக்கம்
ADDED : நவ 14, 2024 05:29 AM

கூடலுார்: ஐகோர்ட் உத்தரவுப்படி, கூடலுார் வன கோட்டத்திலும் உண்ணி செடிகளை அகற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் எந்த பயனும் இல்லாத உண்ணி செடிகள் அதிகளவில் காணப்படுகிறது. இவைகளால், வனப்பகுதிகளில் தாவர உண்ணிகள் விரும்பி உண்ணக்கூடிய தாவரங்கள், புற்கள் வளர முடியாத சூழ்நிலை உள்ளது.
இதனால், வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில், வனத்துறையினர் களை செடிகளான உண்ணி செடிகளை அகற்றி வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. கோர்ட் உத்தரவுபடி உண்ணி செடிகள் வேரோடு அகற்றப்படுகிறது. இப்பணியை ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு செய்துசென்றுள்ளனர்.
இந்நிலையில், முதுமலையை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளிலும் உண்ணி செடிகளை அகற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூடலுார் வனக்கோட்டத்தில் கடந்த மாதம் முதல் கட்டமாக, 247 ஏக்கர் பரப்பளவிலான உண்ணி செடிகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து, இம்மாதம், 125 ஏக்கர் பரப்பிலான உண்ணி செடிகள் அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''ஐகோர்ட் உத்தரவுப்படி கூடலுார் வனப்பகுதிகளில், உண்ணி செடிகள் அகற்றும்பணிகள் நடைபெற்று வருகிறது. வனப்பகுதியில் இந்த செடிகள் அகற்றும் முன்பும், அகற்றிய பின்பும் டிரோன் கேமரா மூலம் 'சர்வே' செய்யப்படுகிறது.
உண்ணிச்செடிகள் அகற்றும் பகுதியில், யானைகள் விரும்பி உண்ணக்கூடிய புற்கள், தாவரங்கள் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வனவிலங்குகளின் உணவு தேவை வனப்பகுதிகளில் பூர்த்தி செய்ய முடியும். மனித -விலங்கு மோதல் தவிர்க்க முடியும்,'' என்றார்.